ஒரு நாள் ஒரு கனவு

ரெண்டு நாளைக்கு முன்னாடி பயங்கர வேலைப்பளு. ஆபீசில் கொஞ்சம் பிரச்சனைகள். எல்லாத்தையும் மூளையில அடைச்சிக்கிட்டு தூங்கப்போனேன். தூக்கத்துல ஒரு கனவு வந்தது.

மலேசியா மாதிரி ஒரு எடம். அதுல பாரா செய்லிங் மாதிரி ஒரு செட்டப். பலூன் எல்லாம் கெடையாது. கரண்டு கம்பி மாதிரி இருக்கும்.

அந்தக் கம்பிகள்ள ஒன்னுல கால வெச்சி இன்னொன்ன கையால பிடிச்சிக்கனும். அவ்வளவுதான். இது ரொம்ப ரொம்ப ஒயரத்துல இருக்கும்.

அந்தக் கம்பி அப்படியே பெரிய ரவுண்டு அடிக்கும். அங்கருந்து பாத்தா கீழ கடல், ஏரி மலையெல்லாம் தெரியுது. கொஞ்சம் கைய விட்டா அவ்வளவுதான். கால் தடுமாறுனாலும் அவ்வளவுதான்.

பயமாவும் இருக்கு. ஆனா அங்கருந்து பாக்க எடங்கள் அழகாவும் இருக்கு. அப்பன்னு பாத்து ஒருத்தன் அந்தக் கம்பியில் கம்பி போட்டு தவ்வி ஏறுறான்

நான் நிக்கிற கம்பி கிடுகிடுன்னு ஆடுது. எனக்கு ஒரே பயம். சமாளிச்சிக்கிட்டு பிடிச்சிக்கிட்டு நிக்கிறேன். ஒரு வழியா ரவுண்டு முடிஞ்சு தொடங்குன எடம் வந்ததும்தான் நிம்மதியாச்சு

எறங்குன எடத்துல சின்னதா ஒரு கோயில். என்னோட குடும்பத்து மக்கள் இருக்காங்க. கோயிலுக்கு முன்னாடி ஒரு பக்கமா மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி உக்காந்திருக்காரு.

திடீர்னு எம்.எஸ்.வி பாடத் தொடங்கிட்டாரு. ஏதோ சாமிப் பாட்டு. ரொம்பப் புதுமையாவும் இருக்கு. இனிமையாவும் இருக்கு. அங்கயிருக்கும் எல்லாரும் ரசிக்கிறாங்க. என்னோட மனசெல்லாம் உருகி பயமெல்லாம் போயிருச்சு. அவ்வளவு அருமையா இருந்துச்சு அந்த பாட்டு.

அவ்வளவுதான் கனவு. எல்லாக் கனவுகளும் நினைவிருப்பதில்லை. இந்தக் கனவு மட்டும் நல்லா நினைவிருக்கு.

கனவுகள ஆராய்ச்சி பண்றவங்க இதைப் பண்ணலாம். அந்த ஆராய்ச்சி முடிவுல என்ன கண்டுபிடிச்சிங்கன்னும் சொல்லுங்க. :)

அன்புடன்,
ஜிரா

ஒரு பிரியாணியின் கதை – உஸ்தாத் ஹோட்டல்

உஸ்தாத் ஓட்டல் படம் வந்து ரொம்ப நாளாச்சு. என்னோட டக்கு படி இப்பத்தான் பாத்தேன். பாக்குறதுதான் டக்குன்னு பாத்தோம்… விமர்சனத்தையாச்சும் ஒடனே எழுதீறலாம்னு முடிவு பண்ணி எழுதி முடிச்சிட்டேன். ஆமா. அதத்தான் நீங்க இப்போ படிக்கிறீங்க.

பிரியாணின்னா அண்டாவுல வேகுறதுன்னு நெனச்சிங்களா? நம்ம வாழ்க்கையே பிரியாணிதான். அப்படி ஒரு பிரியாணித்தனமான கதைதான் உஸ்தாத் ஓட்டல்.

நாலு அக்காக்களுக்குப் பிறகு அஞ்சாவதாப் பொறந்த தம்பிதான் ஃபயீஸ். துபாயில் அப்பாவுக்கு வேலை. அம்மா இல்லாம அக்காக்களால வளந்த தம்பி ஃபயீஸ்.

ஹோட்டெல் மேனேஜ்மெண்ட் படிக்கப் போறதா அப்பா கிட்ட பொய் சொல்லிட்டு ஸ்டார் ஓட்டல் செப் ஆகுறது எப்படின்னு படிச்சிட்டு லண்டண்ல வேலை செய்றான். அவனுக்கு நிக்கா செஞ்சு வெக்க ஊருக்கு வரவைக்கிறாரு அப்பா. வந்தா குட்டு ஒடஞ்சிருது. 5ஸ்டார் ஓட்டல் கட்டுற ஆசை நிராசையாப் போச்சேன்னு அவனோட பாஸ்போர்ட்ட ஒளிச்சு வெச்சிக்கிறாரு.

அந்த வீட்டுல இருக்கப் பிடிக்காம ராவோட ராவா கெளம்பி கோழிக்கோட்டுக்கு வர்ரான் பயீஸ். அங்கதான் தாத்தா கரீம் உஸ்தாத் ஓட்டல நடத்திக்கிட்டிருக்காரு. சின்ன ஓட்டல்தான். ஆனா சூப்பர் ஓட்டல். ஆனா ஓட்டலை வியாபாரமா நடத்தாம குடும்பமா நடத்திக்கிட்டிருக்காரு கரீம் இக்கா. அதுனால கடன் வேற. இப்படியான சூழ்நிலைதான் ஃபயீசு அங்க போறான்.

அங்க போனப்புறம் என்னாச்சுங்குறதுதான் மிச்சக் கதை. கதைய ஒரு வரியில் சொல்லனும்னா இப்படிச் சொல்லலாம்.

எப்படி சமைக்கனும்னு தாத்தா கிட்ட கத்துக்கிறான் பேரன். ஏன் சமைக்கனும்னு அவனுக்குத் தெரிய வரும் போது அவன் வாழ்க்கையே மாறிப் போகுது.

தாத்தா கரீம் இக்காவா நடிச்சது திலகன். கேரளத்தில் பிறந்த நடிப்பு ராட்சசன் திலகன். இவரைத் தவிர இந்த பாத்திரத்தை எடுத்து நடிக்க கேரளாவில் ஆளே இல்லைன்னு சொல்லனும்.

ஃபயீசா நடிச்சிருக்கிறது மம்முட்டியோட மகன் துல்கர் சல்மான். ஆளு நல்லா ஓங்குதாங்கா வளந்திருக்காரு. நடிப்புல இன்னும் முன்னேறுனா எதிர்காலம் சிறப்பாயிருக்கும்.

படத்தின் வசனங்கள் மிகமிக இயல்பாவும் அழுத்தமாகவும் இருக்கு. எனக்கு மலையாளத்துல எழுதத் தெரியாது. அதுனால சில வசனங்களை தமிழில் தர்ரேன்.

(வேனுக்குள் தாத்தாவும் பேரனும் உட்கார்ந்திருக்கிறார்கள். மழை கொட்டுகிறது) பாலை வனத்தில மழை பெஞ்சு பாத்திருக்கியா? நான் பாத்திருக்கேன். ராஜஸ்தான் போனப்போ பாலைவனத்தில் போய்க்கிட்டிருந்தேன். அப்போ இதே போல ஒரு மழை. நல்ல மழை. அப்போதான் எனக்குத் தோணுச்சு… சொர்க்கம்னு சொல்றாங்களே.. அதுக்கு ரொம்பப் பக்கத்தில் இருக்கோம்னு.

(பேரனிடம் தாத்தா) வயிறு நெறையுறதுக்கு யார் வேணும்னாலும் சமைக்கலாம். ஆனா மனசையும் நிறைக்கனும்.

(மகனிடம் அப்பா கோவமாக) ஏண்டா இங்க வந்து இருக்க. இந்த ஓட்டலுக்குள்ள நொழைஞ்சாலே எனக்கு மூச்சு முட்டுது. (உடனே மகன்) ஒங்க வீட்டுக்குள்ள நொழைஞ்சாலே எனக்கும் மூச்சு முட்டுது.

அதே போல மதுரையிலிருக்கும் நாராயண கிருஷ்ணனுக்கு கரீம் இக்கா பேரன் மூலம் குடுத்தனுப்பும் தமிழ்க் கடிதம்.

அன்புள்ள நாராயண கிருஷ்ணன்,

இந்தக் கடிதத்தைக் கொண்டு வர்ரது என்னோட பேரன் ஃபயீஸ். எப்படிச் சமைக்கனும்னு அவனுக்கு நான் கத்துக்குடுத்திருக்கேன். ஏன் சமைக்கனும்னு நீ கத்துக்குடு.

அன்புடன்,
கரீம் இக்கா

நாராயணன் கிருஷ்ணனா நடிச்சது தமிழ் நடிகர் ஜெயப்பிரகாஷ். வம்சம் பசங்க படத்திலெல்லாம் நடிச்சாரே… அதே ஜெயப்பிரகாஷ். படத்துல கதாநாயகியும் உண்டு. நித்யா மேனன். என்ன அழகு. என்ன அழகு. இன்னும் நிறைய சொல்லிக்கிட்டே போகலாம்.

படத்தில் குறையே இல்லையான்னு கேக்கலாம். இருக்கு. கொஞ்சம் மெதுவாப் போற மாதிரி இருக்கு. பொதுவாகவே மலையாளப் படங்கள் கொஞ்சம் மெதுவாத்தான் போகும். அதை மட்டும் கொஞ்சம் கத்தரி போட்டு சரி செஞ்சிருந்தா படம் இன்னும் சூப்பரா இருந்திருக்கும்.

இந்தப் படத்தை தமிழில் எடுத்தா எப்படியிருக்கும்னு நெனச்சுப் பாத்தேன். அப்புறந்தான் தமிழ்ல எடுக்கவே முடியாதுன்னு புரிஞ்சது. கரீம் இக்காவா நடிக்க நடிகர் திலகம் நம்ம கிட்ட இப்ப இல்லையே. வேற நடிகர்கள் நடிக்க முடியாதான்னு கேக்காதீங்க. முடியும். ஆனா நடிகர் திலகத்தால மட்டுந்தான் அந்தப் பாத்திரத்தைச் சுமக்க முடியும். வேற யார் நடிச்சாலும் கமர்ஷியலாயிரும். மலையாளத்துலயே திரும்ப எடுக்க முடியாதே. திலகன் இல்லையே.

படம் முழுக்கவே சாப்பாடு வாசனை. பிரியாணி கிண்டுறது, பரோட்டா தட்டுறது, கோழிய வறுக்குறது, ஆம்லெட் போடுறது, அது இதுன்னு பசியக் கெளப்பி விட்டுரும். படம் பாக்குறப்போ விருந்து சாப்பிட்டுக்கிட்டே பாக்கனும்.

என்னால இந்தப் படத்த ரொம்ப ரசிக்க முடிஞ்சதுக்கும் ஒரு காரணம் உண்டு. கதாநாயகன் ஃபயீசோட எண்ணமும் என்னோட எண்ணமும் ஒரே மாதிரி. எங்கப்பா என்னைக் கொடுமையெல்லாம் படுத்தலை. ஆனா இஞ்சினியர் ஆக்கிட்டாரு. இப்பவும் அப்பப்போ ஸ்டார் ஹோட்டல் செப்பா ஆகனும்னு உள்ளுக்குள்ள ஆசைய புதைஞ்சிருக்கு. அத்தோட எனக்கு ஓரளவு சமைக்கவும் வரும்.

அன்புடன்,
ஜிரா

சின்னதா ஒரு முருகன் பாட்டு

கோயிலுக்குப் போற வழக்கம் உண்டுண்டாலும் வாரந்தவறாம மாதந்தவறாம கோயிலுக்குப் போறவனில்ல நான். முருகான்னு சொல்லி திருநீறை நெத்தியில் பூசிக்கிற மகிழ்ச்சி காசு குடுத்து திருநீறு வாங்கும் கோயில்களில் எனக்குக் கிடைப்பதில்லை.

அப்படியே கோயிலுக்குப் போனாலும் கூட்டமில்லாம நெரிசலில்லாம அருமையா பொறுமையா பாத்து வணக்கம் சொல்லனும். போனோமா… கும்பிட்டோமா.. தட்டுல காசப் போட்டோமா… திருநீறோ தீர்த்தமோ வாங்குனோமா வந்தோமான்னு இருந்தா எனக்கு ஒவ்வாது.

அப்பப்ப பூசையறைல நின்னு முருகான்னு சொல்றப்போ நானா இட்டுகட்டி ரெண்டொரு வரி பாடுவேன். அப்படிப் பாடுறப்போ சுரம் ராகம் தாளம் எல்லாம் பாதளத்துல இருக்கும். ஆனாலும் நம்மளா ரெண்டு வரி பாடுனோமேன்னு திருப்தி. பொதுவா என்ன பாடுனோம்னு வரிகள் மறந்துரும். எப்படிப் பாடுனோம்னு மெட்டு மறந்திரும்.

ஆனா இன்னைக்கு டக்குன்னு பாடுன வரிகளை உங்களோட பகுந்துக்கிறேன். பாட்டுல சுத்தம் நிறை குத்தம் குறைன்னு எது இருந்தாலும் முருகனைப் பிடிச்சுக்கங்க. என்ன விட்டுருங்க. :)

மலை மீது நிற்கின்ற முருகா முருகா
எங்கள் நெஞ்சதில் நீ இன்று வருவாய் முருகா
அலையாடும் செந்தூரின் வடிவேல் முருகா – உன்னைக்
கலை மேவும் தமிழ் கொண்டு புகழ்வேன் முருகா

குறவள்ளி மொழி கேட்கும் முருகா முருகா
திங்கள் முடி கொண்ட அரன் கேட்கும் ஒலியே முருகா
நிலையான பொருளாகும் அறிவாய் முருகா – எங்கள்
சிரம் தோறும் நிறைந்திருக்க மகிழ்வோம் முருகா

அன்புடன்,
ஜிரா

சூது கவ்வும் – விமர்சனம்

World has changed. ஆம். உலகம் மாறித்தான் போய் விட்டது. திரைப்படங்கள் அந்த மாற்றங்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் காட்டிக் கொண்டுதான் இருக்கின்றன.

சூது கவ்வும் படமும் அப்படித்தான். இன்றைய காலகட்டத்தையும் இளைஞர்களின் மனநிலையையும் ஒருவிதத்தில் பிரதிபலிக்கிறது.

புதுமை என்பது புதிதாகத் தருவதல்ல. பழையதையே புதுமையாகத் தருவது. அதுதான் சூது கவ்வும். ஆயிரம் முறை பார்த்துச் சிரித்து விட்ட கடத்தல் நகைச்சுவைதான். ஆனால் படைக்கப் பட்ட விதம் புதுமையாக இருக்கிறது.

என்னைக் கேட்டால் பெரிய கதாநாயகர்களுக்கும் பெரிய இயக்குனர்களுக்கும் இந்தப் படம் ஒரு பாடம். நளனின் அடுத்தடுத்த படங்கள் எப்படியிருக்குமோ, தெரியாது. ஆனால் பிரம்மாண்டச் சகதியில் விழுந்துவிட்ட நூறுகோடி பட்ஜெட் இயக்குனர்களும் ஹீரோயிசம் மட்டுமே காட்டும் சூப்பர் ஹீரோக்களும் திருந்த வேண்டும் என்பதற்கு இந்தப் படம் சான்று.

படத்தின் நல்லவைகளைப் பற்றி முதலில் பட்டியல் போட்டு விடுகிறேன்.

புதுப்புது பாத்திரங்கள்
புதுப்புது நடிகர்கள்
வரம்பு மீறாத இயல்பான நடிப்பு
அலுக்காத திரைக்கதை
படத்துக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவுக்கே ஆன இசை
படம் முழுக்க விரவிக்கிடக்கும் நகைச்சுவை

விஜய் சேதுபதி பொருத்தமான பாத்திரங்களை தேர்ந்தெடுக்கிறாரா அல்லது பாத்திரங்களில் பொருத்திப் போகிறாரா என்று தெரியவில்லை. இவராவது ஹீரோயிசம் செய்யாமல் பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும். குரலும் நடிப்பும் அட்டகாசம். அதிலும் கனவுக் காதலியோடு பேசும் காட்சிகள் அருமை.

அந்த மூன்று இளைஞர்களும் அட்டகாசம். அசோக் செல்வன், சிம்ஹா, ஆர்.ஜே.ரமேஷ் ஆகிய மூவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். இவர்களை முன்பே பார்த்தது போல உள்ளது. நாளைய இயக்குனரில் வந்திருக்கலாம்.

சஞ்சிதா ஷெட்டி… மாமா மாமா.. என்று கூடவே வருவதும். இவர்கள் சீரியசாக நடந்து போகும் இடங்களில் கூட துள்ளிக் குதித்து ஓடுவதும்… செம ரெஃப்ரெஷ்மெண்ட்.

எம்.எஸ்.பாஸ்கர்.. வழக்கம் போல பாத்திரத்துக்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார். உதவாக்கரை மகனையும் உருப்படியில்லாத மனைவியையும் வைத்துக் கொண்டு இவர் படும் பாடு… அப்பப்பா. அதே அவர் மனைவியாக நடித்தவரும் செமை நடிப்பு. ஒரு கட்டத்துக்கு மேல் பெண்களுக்கு கணவனை விட மகன் முக்கியமானவனாகி விடுவான். அதை இதை விட அழகாக வெளிக்காட்ட முடியுமா!

யாருய்யா அந்த இன்ஸ்பெக்டர் பிரம்மாவாக வரும் யோக் ஜப்பி? ஆள் ஜிம்பாடியும் கிடையாது. ஆனாலும் பார்வையாலும் நடிப்பாலும் ஒரு வெறுப்பைக் கொண்டு வந்து விடுகிறார். பார்த்தாலே நான்கு அறை வைக்க வேண்டும் போல இருக்கிறது. அவருக்குக் கடைசியில் கிடைக்கும் தண்டனை… சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாகி விட்டது என்று கிளிஷேத்தனமாகத்தான் சொல்ல வேண்டும்.

அருமைப்பிரகாசமாக வரும் கருணாகரனும் சிறப்பாக நடித்திருக்கிறார். ”முன்னூறு கோடி ஒரு வருஷ டார்கெட். முடியுமா?” என்று ராதாரவி கேட்கும் போது தலையைத் தலைய ஆட்டும் போதும் தேர்தல் காட்சிகளின் போதும் அவர் ராஜ்ஜியம்தான்.

காசு பணம் மணி மணி என்று பாட்டு. என்னவோ நல்லாத்தான்யா இருக்கு. ஆபாசம்னு சொல்ல முடியாது. இதை விட ஆபாசமா கதாநாயகிகளே ஆடிக்கிட்டிருக்காங்க. ஆனா அந்தப் பாட்டு நல்லாத்தான் இருக்கு. அதுலயும் அந்த ராஜகுரு மொபைல் கேமராவில் ஆட்டத்தைப் படம் பிடிக்கும் போது விழுந்து விழுந்து சிரித்து கிளிஷே செய்தேன். மாமா டவுசர் கழண்டிருச்சேய் என்று ஆண்டிரியா கன்னாபின்னாவென்று கலக்கியிருக்கிறார். ஆனால் படத்தில் பாடலை பாதிக்கு மேல் வெட்டி விட்டார்கள் என நினைக்கிறேன்.

படத்தில் குறைகளே இல்லையா? இருக்கின்றன. லாஜிக் பார்க்கவே கூடாது. லாஜிக் தேவைப்படும் இடங்களே கதையிலும் இல்லை. படத்தில் தண்ணியடிக்கும் சிகரெட் குடிக்கும் காட்சிகள் நிறைய. இதைக் குறையாகச் சொல்லலாம். ஆனால் தேவதாஸ் படம் பார்த்து விட்டு தோளில் துண்டைப் போட்டுக் கொண்டு கையில் ஏதாவது பாட்டிலைப் பிடித்துக் கொண்டு உலகே மாயம் வாழ்வே மாயம் என்று அன்றைக்கும் பாடியிருப்பார்கள். கிக்கு ஏறுதே என்று சூப்பர் ஸ்டார் கூட பாடியிருக்கிறார். முன்பே சொன்னது போல, World has changed. அதைத்தான் இது போன்ற படங்கள் காட்டுகின்றன.

ஒரே கதாநாயகன் படம் முழுக்க வந்து ஆடிப் பாடி சண்டை போட்டு அழுது நாட்டைக் காப்பாற்றுவதைப் பார்த்து அலுத்துப் போன நிலையில் சூது கவ்வும் போன்ற படங்கள் பாராட்டப்பட வேண்டிய புதுவரவுகள்.

அன்புடன்,
ஜிரா

தருமனும் தருமமும் – பாகம் 5

இதன் நான்காம் பாகம் இந்தச் சுட்டியில் உள்ளது.

தருமனின் ஐயத்திற்குக் காரணமில்லாமல் இல்லை. திரவுபதியானவள் துச்சாதனனோடு கூடிக் குலவிக் கொண்டுதான் வந்தாள். ஏதோ காதலர் இருவர் மகிழ்ந்து சுகித்து அந்த நினைவுகளில் திளைத்து வருவது போல இருந்தது. அருகில் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று கொதித்துக் கொண்டிருந்தான் தருமன்.

தருமனைக் கண்டதுமே திரவுபதியின் முகம் விடியற்காலை மலர் போல மலர்ந்தது. “குந்தி நந்தனா வணக்கம். உங்கள் வரவு நல்வரவாகுக!” பணிந்து வரவேற்றாள். அப்படியே அங்கிருந்த மற்றவர்களுக்கும் வணக்கம் சொன்னாள். துச்சாதனனும் தருமனை வரவேற்று மற்றவர்களை வணங்கினான்.

தருமன் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து கத்தினான். “திரவுபதி! இதென்ன அலங்கோலம். துச்சாதனனோடு தோளோடு தோள் சேர்த்துக் கொஞ்சிக் கொண்டு வருகின்றாயே! நீ குலமகளா? விலைமகளா? உனக்கு அறிவு மழுங்கிப் போயிற்றா!”

இப்படி அவன் கேட்டது எல்லாரையும் திடுக்கிட வைத்தது. திருதுராட்டிரர் எதையோ சொல்ல வந்தார். ஆனால் திரவுபதி அவரைத் தடுத்து தானே பேசினாள். “மாமா! சற்று அமைதியாக இருங்கள். நான் அவருக்கு விடை சொல்கிறேன்.”

”ஆரிய புத்திரரே! கணவன் என்ற வகையில் அதிகாரத்தைக் காட்ட இது ஒன்றும் மண்ணுலகம் இல்லை. இந்திரப்பிரஸ்த சட்டங்கள் சொர்க்கத்தின் நீதிமன்றத்தில் மதிக்கப்படுவதில்லை..

சொர்கம் என்பது இன்பமயமானது. இங்கு பெண்கள் என்றென்றும் நித்தியகன்னிகள். ஒருவரின் விருப்பமின்றி ஒருவரைத் தீண்டுவது இங்கு தகாது. அதே போல விரும்பிக் கூடினால் அவர்களைத் தடுப்பதும் தகாது. துச்சாதனனோடு நான் கூடினேன். ஆமாம். விரும்பித்தான் நாடினேன். இருந்தும் நான் கன்னிகைதான். ஐயமிருந்தால் என்னைக் கூடித் தெளிவு பெறுங்கள்.”

உலகமே சுழல்வது போல இருந்தது தருமனுக்கு. தருமங்கள் அனைத்தையும் அறிந்தவன் என்று எண்ணிக் கொண்டிருந்தவனுக்கே திரவுபதியின் பேச்சு குழப்பமாக இருந்தது. “இதென்ன பைத்தியக்காரத்தனம். கண்டவனோடு கூடுவதா பெண்மை?” எதையோ கேட்க வேண்டும் என்பதற்காக கேட்டான்.

திரவுபதியிடம் சீற்றமில்லை. ஆனால் உறுதியாகச் சொன்னாள். “பெண்மை என்றால் என்னவென்பதை ஆண்மை விளக்கக்கூடாது. அப்படி விளக்கினால் ஆண்மை எதுவென்று பெண்கள் விளக்கவேண்டிவரும். ஒரு பெண்ணின் கன்னித்தன்மைதானே ஆடவர்க்குத் தேவை. அதைப் பேணிக் காப்பதுதான் பெண்ணின் கடமை என்று மண்ணுலகில் சொல்கின்றீர்கள். அதற்குத்தானே எங்களுக்கு அத்தனை கட்டுப்பாடுகள். இதோ பாருங்கள். உடலை முழுமையாக மூடியிருக்கிறேன். எனது அங்கங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன. எந்த ஆடவனும் என்னைப் பார்த்து கிறங்க மாட்டான். அதுதானே உங்களுக்கு வேண்டியது. பெண்கள் மனதில் எதையாவது நினைத்து விரும்பினால் உங்களுக்கு என்ன வந்தது?”

தருமன் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டான். “திரவுபதி, நீ என் மனைவி. பாண்டவர் ஐவருக்கும் மனைவியாகக் கடமைப் பட்டவள். எங்கள் பிள்ளைகள் விளைந்த நிலம் நீ. இப்படி மற்றவர்களோடு கூடினால் எப்படி? அதற்கும் விதம்விதமாய் விளக்கம் சொன்னால் எப்படி?”

சிரித்து விட்டாள் பாஞ்சாலி. “ஆரிய புத்திரருக்கு இன்னும் விளங்கவில்லை போலும். மனைவி என்றால் அழைத்ததும் வந்து கூட வேண்டும். வேசி போல நடந்து கொள்ள வேண்டும். மறுக்கக் கூடாது. இல்லையா! உங்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றுப் போடும் இயந்திரமாக இருந்தால் போதும். அல்லவா!

எங்கள் மாதவிடாய்க் கணக்கை வைத்துதானே நாங்கள் ஒருவனுக்கு மட்டுமே ஆனவள் என்று ஆண்களால் உபதேசிக்கப்பட்ட மண்ணுலக நீதி சொல்கிறது. இது விண்ணுலகம். ஆனாலும் மண்ணுலகத்திலும் புரட்சி செய்தவர் நீர். சகோதரர்களாகிய உங்கள் ஐவருக்கும் மனைவியாக நான் இருந்ததே மண்ணுலகில் பெரும் புரட்சிதான். இதை காலம் பல கடந்தாலும் ஆணாதிக்க வெறியர்கள் கேலி செய்து கொண்டுதான் இருப்பார்கள்.

அப்படிப் புரட்சி செய்த நீங்கள் கூட விளைநிலம் என்று பேசத் தொடங்கி விட்டீர்கள். சொர்க்கத்தின் நீதி தெரியாமல் பேசாதீர்கள். இங்கே மாதவிலக்கு என்ற தொல்லையே எங்களுக்கு இல்லை. ஆகையால் எங்களோடு யார் கூடினாலும் பிரச்சனையில்லை. ஆகையால் எங்களோடு கூடியவன் விட்டு விலகினால் எத்தனை நாள் கழித்து அடுத்த ஆண் எங்களை மணக்கலாம் என்று கணக்குப் போட முடியாது.

இப்போது நான் சொல்லிக் கொண்டிருப்பவைகளை சொர்க்கத்திலுள்ள ஆடவர்கள் அனைவருமே அறிவார்கள். நீங்கள் உயிரோடு இங்கு வந்திருக்கின்றீர்கள். உயிரோடு உங்கள் இதயமும் வந்ததால், அது மண்ணுலகத்து நியாயங்களையே இங்கும் பேசுகிறது. பாவம்! பொருந்தாத இடத்தில் இருக்கின்றீர்கள்.”

இப்பொழுது திருதுராட்டிரன் வாயைத் திறந்தான். “யுதிஷ்டிரா! பெண்கள் பிள்ளைகளைப் பெறுவதால் மண்ணுலகில் அவர்களை அடக்கி அதையே அவர்கள் சிறப்பு என்று அவர்களும் எண்ணும் அளவுக்குச் செய்ய முடிந்தது. ஆனால் இது சொர்க்கம். இங்கு பெண்கள் கருத்தரிப்பதே இல்லை. ஆகவே அவர்கள் யாரிடம் கூட வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்து கொள்கிறார்கள். அதற்காக அவர்கள் எல்லாரோடும் கூடுவதில்லை. மேலும் இங்கு ஆண்களும் தங்கள் நிலையை உணர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.

இங்கு எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் வன்முறை கொண்டு கூடுவதில்லை. சொர்க்கம் அவர்களுக்கு அந்த அறிவைத் தந்திருக்கிறது. ஆகையால் வன்முறை செய்து விட்டு பெண்களின் ஆடை மீதும் நடவடிக்கை மீதும் குற்றம் சொல்வதுமில்லை. சொர்கத்துக்கு வரும் பொழுதே அனைவரும் நல்லவர்களாகவும் இங்குள்ள விதிகளுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்கின்றார்கள்.”

தருமனுக்குக் கிறுக்குப் பிடிக்கத் தொடங்கியிருந்தது. திருதுராட்டிரன் விட்ட இடத்திலிருந்து கர்ணன் தொடர்ந்தான். “தம்பி தருமா! இறைவனை வணங்கி அவன் மீது உண்மையான நம்பிக்கை கொண்டு வாழ்ந்தவர்களுக்கான சொர்க்கமும் அதன் விதிகளும் சொர்கத்தின் உண்மையான குடியினருக்குத் தானாகப் புரியும். தெரியும். ஆகையால் இங்கு இதனால் குழப்பங்கள் எதுவுமே வருவதில்லை.”

முழுப் பைத்தியமாகியிருந்தான் தருமன். இரண்டடி பின்னால் சென்று கத்தினான். “இல்லை. நீங்கள் சொல்வதெல்லாம் பொய். என்னை ஏமாற்றப் பார்க்கின்றீர்கள். இதுவும் சொர்கத்துக்குள் நுழைவதற்கான ஒரு சோதனையா? உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் எல்லாரும் உண்மையிலேயே எனது உறவினர்களா? இல்லை மாயையா? எனக்கு உடனடியாக பகவான் ஸ்ரீகிருஷ்ணரைப் பார்க்க வேண்டும். அவர் எங்கேயிருக்கிறார்? அவரிடம் என்னை அழைத்துப் போங்கள். என்னை அழைத்துப் போங்கள்.” கதறினான் தருமன்.

கொஞ்சம் முன்னால் வந்து சொன்னான் சகுனி. “மருமகனே! கிருஷ்ணன், ருத்ரன் என்றெல்லாம் நீ வணங்கியது மண்ணோடு போயிற்று. இங்கேயும் அங்கேயும் எங்கேயும் இறைவன் ஒருவனே. நீ விரும்புகிற வடிவத்தில் உனக்காக ஓடிவந்த இறைவன் உருவாயும் அருவாயும் இருப்பவன். கல்லில் இருப்பதால் கல்லே கடவுள் அல்ல. இறைவன் கல்லிலும் சொல்லிலும் நமக்கு உள்ளிலும் நம்மைக் கடந்தும் இருப்பவன்.

நீ உன் பண்பாட்டோடு ஒட்டி இறைவனைப் படைத்தாய். வணங்கினாய் உனக்காக உன் மீது கருணை கொண்டு நீ விரும்பியபடியே வந்தார் இறைவன். ஆனால் சொர்க்கம் அனைவருக்கும் பொதுவானது. ஆகையால் இறைவனை இங்கே தேடிப் போகவேண்டியதில்லை. உண்மையாக அழைத்தால் எங்கும் இருப்பவர் உனக்காக இங்கும் தெரிவார்.”

“இல்லை. இல்லை. நீங்கள் என்னை ஏமாற்றுகின்றீர்கள். என்னைக் குழப்புகின்றீர்கள். நான் இங்கிருந்து செல்கிறேன். உங்களோடு என்னால் இருக்க முடியாது. இது ஏதோ மூளையைக் குழப்பும் மாயை நிறைந்த சோதனை. சோதனை.”

சொல்லிக் கொண்டே திரும்பி ஓடினான் தருமன். முதலில் தருமனைத் தடுக்க நினைத்தவர்கள் அந்தத் திட்டத்தை உடனே கை விட்டார்கள். சொர்க்கத்தினர் அல்லவா அவர்கள். தத்தமது வேலையைப் பார்க்கப் போய் விட்டார்கள்.

விடுவிடுவென ஓடினான் தருமன். எங்கே போவதென்றே தெரியவில்லை. அவன் உள்ளம் முழுவதும் நூறு கோடி சிந்தனைகள் சிலந்தி வலை கட்டியிருந்தன. எங்கே ஓடுகிறோம் என்பதே தெரியாமல் ஓடியவன் காலை தடக்கென்று ஏதோ ஒன்று இடறியது. தடுமாறி கீழே சரிந்தான். கீழே என்றால் உண்மையிலேயே கீழே. சர்ர்ர்ர்ர்ர்ரென்று மண்ணுலகை நோக்கி வீழ்ந்தான்.

ஓவென்ற ஓலம் உலகிற்கே கேட்கும் வகையில் கத்தினான். ஆனால் யார் காதிலும் விழவில்லை. சத்தென இமயத்தில் இடித்தது அவன்தான் பனிப்பாறையில் விழுந்தான். அந்த ஒரு நொடியில் உண்மையிலேயே உயிரை விட்டான் தருமன்.

தருமனும் முடிந்தான். தருமமும் முடிந்தது.

அன்புடன்,
ஜிரா

தருமனும் தருமமும் – பாகம் 4

இதன் மூன்றாம் பாகம் இந்தச் சுட்டியில் உள்ளது.

நகுலனும் சகாதேவனும் எங்கிருக்கிறார்கள் என்று தருமனிடம் சொன்னார் குந்தி.

“நகுலனும் சகாதேவனும் மாதரியோடும் தந்தையாரோடும் ஓடம் விளையாடுகிறார்கள். இன்னும் சற்று நேரத்தில் நம்மோடு வந்து சேர்வார்கள். அவர்களை அழைத்து வர பிதாமகர் பீஷ்மரும் பெரிய பாட்டியார் சத்தியவதியும் போயிருக்கிறார்கள்”

குந்தியை இடைமறித்தார் திருதிராட்டிரர். “குந்தி, முதலில் தருமன் தனது களைப்பைப் போக்கட்டும். தருமா! நீ நிற்பது கற்பக மரத்தடியில். உனக்கு வேண்டியவைகளைக் கேட்டு அருந்து. நல்ல கனிகளைக் கேள். இல்லை உனக்கு எது வேண்டுமோ அதைக் கேள். கிடைக்கும்.”

லேசாகப் பசித்தது தருமனுக்கு. கற்பகமரத்திடம் எதையும் கேட்கலாம் அல்லவா. உண்டால் தனக்கு உண்மையிலேயே நிறைவு தரும் உணவு வேண்டும் என்று கேட்டான். ஒரு தங்கத் தாம்பாளத்தில் பலவித உணவுகள் வந்தன. காய்கறிகளைச் ஒன்றாகக் கூட்டிச் சமைத்தது, சுட்ட இறைச்சி, செந்நெற் சோறு, கிண்ணம் நிறைய நெய், நெய்யில் வெந்து குழைந்த பருப்பு, பலவிதப் பழங்கள் என்று தட்டு நிறைந்திருந்தது.

வசதியாக அமர்ந்து உண்டான் தருமன். கர்ணனும் சகுனியும் அமுதரசம் வேண்டுமென்று கற்பக மரத்திடம் கேட்டு அருந்தினார்கள்.

உண்ட பின்பு தருமன் சற்று அமைதியானான். வயிறு நிறைந்து விட்டதல்லவா. கர்ணனைப் பார்த்து கேட்டான். “அண்ணா! சொர்க்கத்தைப் பற்றிச் சொல்லுங்கள். மண்ணுலகத்துகும் இந்த விண்ணுலகத்துக்கும் என்னென்ன வேறுபாடு?”

“தம்பி, சொர்க்கம் என்பது இன்பபுரி. இது இறைவனின் அன்புக்குப் பாத்திரமானவர்கள் வாழும் ஊர். இறைவனின் அருளுக்குப் பாத்திரமானவர்களுக்கு வீடுபேறு கிடைக்குமாம். அடுத்தவர்களுக்கு துன்பம் கொடுத்தவர்களும் நீதிக்குப் புறம்பாக நடந்தவர்களும் நரகத்து நெருப்பில் உழல்வார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் நரகத்தை நான் பார்த்ததில்லை. அங்கு சென்றவர்களையும் சந்தித்ததில்லை. இங்கு வந்த பிறகு மண்ணுலகம்தான் நரகமோ என்று ஐயம் வருகிறது.

இந்தச் சொர்க்கத்தில் பசியில்லை. பட்டினியில்லை. வேண்டிய பொழுது வேண்டியதைச் சாப்பிடலாம். எல்லாம் கிடைக்கும். இங்கு ஊனம் எதுவும் இல்லை. ஒருவரின் அனைத்து அவயங்களும் எல்லா வகையிலும் ஒத்துழைக்கும். இரவுமில்லை. பகலுமில்லை. நமது மனம் எப்படி விரும்புகிறதோ அப்படியே பருவநிலை இருப்பதாகத் தோன்றும். நீ மழையை விரும்பினால் உனக்கு மட்டும் மழை பெய்யும். ஆனால் அருகிலிருக்கும் எனக்கு அதே இடத்தில் நிலாக்காயலாம். அல்லது வெயிலும் அடிக்கலாம்.

இங்கு அனைத்தும் நமது எண்ணங்களைப் பொருத்தது. ஆங்காங்கே கற்பகதருக்கள். வேண்டிய அனைத்தும் கிடைக்கும். அனைவருக்கும் அனைத்தும் பொதுவாக இருப்பதால் இங்கு கடனில்லை. வட்டியில்லை. வட்டியில் கொழுக்கும் வட்டில்களும் இல்லை. இங்கே பெண்கள் எப்பொழுதுமே தூயவர்கள். அவர்களோடு எப்பொழுது வேண்டுமானாலும் கூடிக் களிப்புறலாம். ஆனால் அதற்கு அவர்கள் அனுமதி வேண்டும். அப்படி அனுமதிக்காத பெண்ணைத் தொட்டவர்கள் உடனே நரகத்தில் வீழ்வார்களாம். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.”

கர்ணன் சொல்லச் சொல்ல தருமனுக்கு அலுப்புத் தட்டத் தொடங்கியது. அவன் மனமும் உடலும் திரவுபதிக்காக ஏங்கியது. திரவுபதி இப்பொழுது இங்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தான். நினைத்த இடமோ கற்பக மரத்தடி. அது திரவுபதியின் மனதை மாற்றி அங்கு வரவழைத்தது.

தொலைவில் திரவுபதி வருவது தருமனின் கண்களுக்குப் புலப்பட்டது. “எத்தனை முறை பார்த்த முகம். எளிதில் மறக்குமா! அந்த நடையும் உடையுமே சொல்லுமே பாஞ்சாலியின் பாங்கை! ஆனால் உடன் வருவது யார்? தெரிந்தவன் போல இருக்கிறது. நகுலனா? இல்லையே. நகுலன் தந்தையோடும் தாயோடும் ஓடம் விளையாடப் போயிருக்கிறானே. சகாதேவனும் உடன் சென்றிருக்கிறான் என்று அம்மா சொன்னார்களே. அருச்சுனனும் பீமனும் துரியோதனனைக் கூட்டிக் கொண்டு மானசரோவரம் வரை சென்றிருக்கிறார்கள். வேறெந்த ஆண்மகன் பாஞ்சாலியின் தோள் மீது கை போட்டுக் கொண்டு விளையாட முடியும்?”

பாஞ்சாலியும் உடன் வருகின்றவனும் இன்னும் நெருங்கி வந்தார்கள். இப்பொழுது அது யாரென்று யுதிஷ்டிரனுக்குத் தெரிந்தது. தெரிந்ததுமே தலை சுற்றியது. இரத்தம் கொதித்தது.

“பாவி துச்சாதனா! நீயா! எவ்வளவு துணிவிருந்தால் பாஞ்சாலியின் தோளில் கை போட்டுக் கொண்டு வருவாய்! குருஷேத்திரத்தில் கண்ட பீமனின் கதையின் ருசியை உனது நெஞ்சு மறந்து விட்டதா! அன்று அவை நடுவே அவளை அம்மணமாக்க நினைத்து சீலையை உறித்தாயே! அதற்காக உன் தோலைப் போர்க்களத்தில் உறித்தது மறந்து போனதா?” தருமன் மனதுக்குள் கத்திக் கதறினான். “ஆனால்………பாஞ்சாலியும் துச்சாதனனோடு குலவிக் கொண்டு வருகிறாளே! என்ன ஆயிற்று!”

தொடரும்,

அன்புடன்,
ஜிரா

தருமனும் தருமமும் – பாகம் 3

இதன் இரண்டாம் பாகம் இந்தச் சுட்டியில் உள்ளது.

அண்ணன் கர்ணனுடனும் மாமன் சகுனியுடனும் சொர்க்கத்தில் நடந்தான் தருமன்.

சற்று நடந்ததுமே ஊர் வந்தது. அழகிய எடுப்பான வீதிகள். வீதிகளின் இரண்டு பக்கங்களிலும் புத்தம்புதிதான வீடுகள். இல்லை. மாட மாளிகைகள். இல்லையில்லை. பெரும் கோபுரங்கள். நடுநடுவே அழகிய மலர்ச்சோலைகள். மடுக்கள். மடுக்களைச் சுற்றி ஓய்வெடுக்கும் அழகிய பொன்னிற அன்னங்கள். மடுவில் நடுவில் பூத்து மிதந்த செந்தாமரைகளும் வெண்டாமரைகளும். அந்தி வேளையோ எந்த வேளையோ என்று தெரியாமல் அல்லியும் மலர்ந்திருந்தது.

சூரியன் கண்களில் தென்படவேயில்லை. ஆனாலும் பொன்னிற வெளிச்சம் எங்கும் பரவியிருந்தது. அதுவும் கண்களை உறுத்தவில்லை. தோலைச் சுடவில்லை. வியர்க்கவில்லை. மேனியெங்கும் ஏதோவொரு சுகம் பரவியது.

பெரியவர்களைக் காண மூவரும் நீண்ட தூரம் நடக்க வேண்டியிருக்கவில்லை. காந்தாரியும் திருதுராட்டிரனும் குந்தியும் ஒரு பெயர் தெரியாத மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். வெள்ளி மரத்தில் பொன்னிறத்து இலைகளும் வைர மொட்டுகளும் பவழப் பூக்களும் நிறைந்திருந்தன. காற்றில் அசையும் வெள்ளியிலைகள் மெல்லிய வெள்ளிமணி ஓலிக்கும் இசையைப் பரப்பியபடியிருந்தது. அந்த அபூர்வ மரத்தைப் பார்த்த பார்வையை தருமனால் விலக்க முடியவில்லை.

கலகலப்பாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த பெரியவர்கள் மூவரின் கைகளிலும் கோப்பைகள் இருந்தன. செந்நிறக் கோப்பைகளில் வெண்ணிறத்தில் ஏதோ அருந்திக் கொண்டிருந்தனர்..

தருமனைக் கண்டதும் மூவரும் முகமலர்ந்தார்கள். மூவரையும் வணங்கி விட்டு கர்ணன் சொன்னான். “மதிப்புக்குரிய பெரியப்பாவுக்கும் பெரியம்மாவுக்கும் எனது வணக்கங்கள். தாயார் குந்திக்கும் எனது வணக்கங்கள். நமது யுதிஷ்ட்டிரன் இன்று நம்மிடம் வந்துள்ளான். அவனது வணக்கங்களை உங்களுக்குக் காணிக்கையாக்குகிறான்.”

கர்ணன் சொன்னதும் தருமன் மூவரையும் பணிந்து எழுந்தான். குந்தி அவனை உச்சி முகர்ந்து அன்பை வெளிப்படுத்தினாள். யாருக்கும் பேச்சு வரவில்லை. காந்தாரிதான் முதலில் பேச்சைத் துவக்கினாள்.

“மகனே தருமா! உன்னை இன்றுதான் நான் கண்கொண்டு காண்கிறேன். உனது பெரியப்பாவும் அப்படித்தான். உன்னைச் சொர்க்கத்தில் கண்டு உள்ளம் நெகிழ்கிறது. நீ வரப்போவதை நாங்கள் ஏற்கனவே அறிந்திருந்தோம். எங்களோடு நீ வந்து சேர்ந்து நமது குடும்பம் ஒன்றாவதில் மெத்த மகிழ்ச்சி. உன்னைச் சந்திப்பதில் சுயோதனனும் மிகவும் மகிழ்வான்.”

திருதுராட்டிரனும் காந்தாரியும் எப்பொழுதும் துரியோதனனை சுயோதனன் என்றுதான் அழைப்பார்கள். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சல்லவா.

“தாயே தங்கள் அனைவரையும் இங்கு மீண்டும் சந்திப்பதில் நானும் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தம்பி துரியோதனனோடு சேர்த்து நூற்றுவரையும் சந்திக்க மகிழ்ச்சிதான் எனக்கு. அவர்கள் எங்கே இருக்கிறார்கள் இப்பொழுது?”

கவுரவர்கள் நூறு பேரும் சொர்க்கத்திலா இருக்கிறார்கள் என்ற ஐயம் தருமனுக்கு. தருமனின் ஐயத்தைத் தீர்க்கும் பதிலைக் குந்தி சொன்னாள்.

“யுதிஷ்டிரா! உனது தம்பிகள் நூற்று ஐவரும் இங்குதான் இருக்கின்றார்கள். இப்பொழுது எங்கேயிருக்கின்றார்கள் என்று தெரியவில்லை. ஆனால் சற்று முன்னேதான் சுயோதனனோடு பீமனும் விஜயனும் சென்றார்கள். அனேகமாக மானசரோவருக்குச் சென்றிருப்பார்கள் என்று நினைக்கிறேன். பீமன் முன்பொருமுறை அங்கு சென்ற கதையைச் சொல்லிக் கொண்டிருந்தான். அதைக் கேட்டதும் சுயோதனனுக்கும் அங்கு செல்ல ஆசை வந்தது. ஆகையால் அவர்கள் மூவரும் மானசரோவர் சென்று நீராடப் போயிருக்கிறார்கள்.”

தருமனுக்குத் திடுக்கென்றது. ஏற்கனவே ஒருமுறை இப்படித்தான் துரியோதனன் பீமனைக் கட்டி ஆற்றில் போட்டான். அதே போல இப்பொழுதும் செய்து விட்டால் என்ன செய்வது என்று அவன் மனம் அஞ்சியது. கொஞ்சமும் யோசிக்காமல் அனுப்பிய தாயார் குந்தியின் மேல் லேசான கோவம் வந்தது. ஆனால் பெரியப்பா பெரியம்மா முன்னால் வெளிக்காட்டினால் நன்றாக இருக்காது என்று பேசாமல் இருந்தான். நகுல சகாதேவர்களையாவது பார்க்கலாம் என்று நினைத்தான்.

“அம்மா! நான் நகுலனையும் சகாதேவனையும் பார்க்க வேண்டும். அவர்கள் எங்கே அம்மா?”

தொடரும்

அன்புடன்,
ஜிரா

Follow

Get every new post delivered to your Inbox.

Join 2,093 other followers

%d bloggers like this: