ஆண்டவனே கொஞ்சம் அறிவைக் கொடு

ஒரு நிகழ்ச்சில வீணையிசையா கேட்டதிலிருந்து இந்தத் திருப்புகழ் மேல ஆர்வம். ரெண்டே வரிதான். ஒவ்வொரு வரியும் எட்டு சீர். லேசா நினைவுல வெச்சுக்க வசதியானது.

கருவூர்னு சொல்லப்படுற கரூர் திருப்புகழ். கரூர் சேரநாடா சோழநாடான்னு பலருக்கு குழப்பம். சேரநாட்டின் வட எல்லைதான் வஞ்சி(கரூர்). அப்பப்போ சோழன் வந்து சண்டை போட்டு பிடிச்சு வெச்சுக்குவான். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு நாட்டோட இருந்திருக்கு கரூர். இத்தனைக்கும் கரூரை சேர சோழ பாண்டிய நாட்டின் முக்கூடல்னு சொல்லலாம். ஊர் அமைஞ்சிருக்கும் எடம் அப்படி. அதுனாலதானோ என்னவோ கரூருக்கு வஞ்சி முற்றம்னு இலக்கியங்கள் பேர் சொல்லுது. ஆன்பொருநை ஆற்றக்கரையில் இருக்கும் ஊர். பின்னாளில் அமராவதின்னு மாத்தப்பட்டிருக்கு. பொருநைன்னு பேர் இருந்த ஆறுகளுக்கு மட்டும் பெயர் மாத்தியிருக்குறது ஏன்னு யோசிக்கிறேன். தெரியல. பொருநை -> தாமிரபரணி. ஆன்பொருநை -> அமராவதி.

கரூரை சேர நாட்டோட பழைய தலைநகரம்னு நிறைய பேர் சொல்றாங்க. அதுல எனக்கு உடன்பாடில்ல. மூன்று நாடுகளும் முக்கூடும் எடத்துல தலைநகரத்தை வைக்கிற அளவுக்கு சேரர்கள் இருந்திருக்க மாட்டாங்க. வஞ்சின்னு இன்னொரு ஊரும் உண்டு. இன்னைக்கு அதை கொடுங்காளூர்னு சொல்றாங்க. அதுதான் சேரனுடைய தலைநகரம் வஞ்சி. இந்த வஞ்சியைப் பத்தி இன்னொரு பொழுது பாக்கலாம். இப்ப கரூர் வஞ்சிக்கு வருவோம்.

Karur - 1கரூர் மக்களுக்கு தாந்தோனி மலை நல்லாத் தெரிஞ்சிருக்கும். தான் தோன்றி மலைன்னு பெயர்க்காரணம் வேற சொல்வாங்க. ஆனா அது தப்புன்னு எத்தனை பேருக்குத் தெரியும்? சங்க இலக்கியம் படிச்சா பல ஊர்களுக்குப் பின்னால் இருக்கும் பெயர் வரலாறு புரியும். தாமான் தோன்றி அந்த ஊரோட பேர். தாவுகின்ற மான் தோன்றும் ஊர். அங்க இருக்கும் மலை தாமான் தோன்றி மலை. அந்த ஊரை ஆண்ட சேரர் வழிச் சிற்றரசன் தாமான் தோன்றிக்கோன். தானாய்த் தோன்றிய மலைன்னு சொன்னா கேக்கும் போது அப்படியே புல்லரிக்கும். ஆனா எல்லா மலைகளுமே தானாய்த் தோன்றியதுதான்னு நாம யாரும் யோசிக்க மாட்டோம்.

Pasupatheeswarar-Temple-(17)_original_watermarkகரூர்ல சின்ன வயசுல இருந்திருக்கேன். பசுபதீசுவர் கோயில் வீட்டிலிருந்து நடக்குற தூரம். அந்தக் கோயில்ல நுழைஞ்சதும் உள்ள இருக்கும் மண் தரை ரொம்பப் பிடிக்கும். இப்பல்லாம் கல் பாவியிருக்காங்கன்னு கேள்விப்பட்டேன். அந்தக் கோயில் முருகன் மேல அருணகிரிநாதர் பாடியதுதான் இந்தத் திருப்புகழ்.

சே… நமக்கு இன்னும் கொஞ்சம் அறிவிருந்தா எங்கயோ போயிருக்கலாம். இப்படி நாம எல்லாருமே எதோவொரு வேளையில நெனைச்சிருப்போம். இப்பவும் கூட நெனச்சுக்கிட்டிருப்போம். அருணகிரிநாதரும் நெனச்சிருக்காரு போல. அதான் எடுத்த எடுப்புலயே “மதியால் வித்தகனாகி”ன்னு தன்னோட விருப்பத்தைச் சொல்றாரு.

ஆனா பாருங்க, அடுத்து “மனதால் உத்தமனாகி”ன்னு கேக்குறாரு. இத நாம யாரும் பொதுவா விரும்ப மாட்டோம். ஏன் தெரியுமா? நாமள்ளாம் நம்மையே உத்தமர்கள்னு நம்புற அளவுக்கு சுயபோதை உள்ளவங்க. சுயமோகர்னும் சொல்லிக்கலாம். வேற யாரோட பேரோ நினைவுக்கு வந்தா நான் பொறுப்பில்லை. இப்படி ஏற்கனவே உத்தமரா இருக்குற நாம ஏன் உத்தமனாகனும்னு கேக்கப் போறோம். ஆனா முருகக் கடவுளே வந்து பாடம் சொன்ன அருணகிரிநாதர் மனதால் உத்தமனாகனும்னு கேக்குறாரு.

இந்த வரிசைல ஒரு மறை பொருள் இருக்கு. மொதல்ல அறிவு வேணும். அறிவிருந்தா எதையும் கழட்டி மாட்டலாம். வேண்டியபடி செய்யலாம். ஆனா அறிவு நல்லதையும் அறியும். கெட்டதையும் அறியும். அப்படி அறிஞ்ச வித்தகன் நல்லது சொல்ற வழியில் போகனும்னா அவன் உத்தமனாகவும் இருக்கனும். இல்லாட்டி படிச்சவன் செய்ற தப்புதான் பெரிய தப்பாயிருக்கும். அறிவில்லாதவன் நல்லதும் செய்ய மாட்டான். கெட்டதும் செய்யமாட்டான். படிச்சவனைப் பாத்துதான் பயப்பட வேண்டியிருக்கு.

சரி. வித்தகனாயாச்சு. உத்தமனாயாச்சு. அடுத்து?

மனதில் சிவஞானம் பதிவாக வேண்டும். அப்ப வைணவர்களுக்கு? யாராக இருந்தாலும் இறைவனைச் சிந்திக்கிற எண்ணம் மனதில் பதிவாக வேண்டும். அப்படிப் பதிஞ்சாதான் பரயோகம் கிடைக்குமாம். பரயோகம்னா என்னன்னு புரியலைன்னா ஜென்நிலைன்னு வெச்சுக்கோங்க. ஜென்நிலை வேணும்னு கேக்குறாரு அருணகிரி.

முதல்ல வித்தகனாகி, பிறகு உத்தமனாகி, மனதில் இறைச்சிந்தனை பதிவாகி, ஜென்நிலையைக் கொடு!

இதுதான் முதல் வரி.

மதியால் வித்தகனாகி மனதால் உத்தமனாகி பதிவாகிச் சிவஞான பரயோகத் தருள்வாயே!

அப்போ ரெண்டாவது வரி?

யார் கிட்ட இந்த வரத்தைக் கேக்குறாருங்குறதுதான் ரெண்டாவது வரி.

நிதியே நித்தியமே என் நினைவே நற்பொருளாயோய் கதியே சொற்பரவேளே

என் செல்வமே! என்றைக்கும் நிலைத்திருக்கும் பொருளே! என் நினைவே! சிறந்ததில் எல்லாம் சிறந்த பெரும்பொருளே! என்னுடைய புகலிடமே! ஊர் புகழும் தலைவனே!

கருவூரிற் பெருமாளேகருவூரில் இருக்கும் முருகப் பெருமாளே!

அவ்வளவுதான் பொருள். இந்தத் திருப்புகழை நீங்க திரும்பத் திரும்ப படிக்கும் போது அதுக்குள்ள இன்னும் பல பொருள் படிமங்களாக உங்க அறிவுநிலைக்கு ஏத்த மாதிரி புரியலாம். ஆனா அடிப்படைப் பொருள் இதுதான்.

Murugan WOP 1ஆண்டவா! அறிவைக் கொடு. அந்த அறிவை வைத்து தவறு செய்யாமல் நல்லது மட்டும் செய்யும் உத்தமனாக்கு. உத்தமமான உள்ளத்தில் உன் நினைவைக் கொடு. அந்த நினைவினால் மேலான யோகநிலையில் என்னை நிலை நிறுத்து. ஆண்டவா! என் செல்வமும் நீ! என்றும் நிலைத்திருக்கும் அருளும் பொருளும் நீ! என் நினைவும் நீ! பேரின்பப் பொருளும் நீ! எனக்கு கதியும் நீ! உலகம் போற்றும் பெரும்பொருளும் நீ!

அருணகிரிநாதர் முருகனேன்னு போட்டிருக்காரு. நீங்க உங்களுக்குப் பிடிச்ச பேரைப் போட்டுக்கலாம்.

மதியால் வித்தகனாகி மனதால் உத்தமனாகி
           பதிவாகிச் சிவஞான பரயோகத் தருள்வாயே
நிதியே நித்தியமே என் நினைவே நற்பொருளாயோய்
           கதியே சொற்பரவேளே கருவூரிற் பெருமாளே

இந்தத் திருப்புகழை ஓதுவார் பா.சற்குருநாதன் அவர்கள் குரலில் கேட்க.

இந்தப் பாடலை கர்நாடக இசைப்பாடகர்களும் பாடியிருக்கிறார்கள். ஆனால் உத்தமனாகி என்பதை உதமனாகி என்று ஓடுகிறார்கள். ஓதுவார் பா.சற்குருநாதன் பாடியது சிறப்பாக இருக்கிறது. இவர் பாடி வலையேற்றியிருக்கும் மற்ற பதிகங்களும் அருமை.

அன்புடன்,
ஜிரா

About G.Ra ஜிரா

தன்னைத் தான் சுழலும் பூமியிலே என்னை நானறியா வாழ்வினிலே நேற்றை நினைவாக்கி இன்றை நடப்பாக்கி நாளை நோக்கி நிற்பவன். ஓடும் வரை ஓடும் கால்கள் வேண்டி நிற்பவன்.
This entry was posted in அருணகிரிநாதர், இறை, இலக்கியம், கரூர், தமிழ், தாந்தோன்றிமலை, திருப்புகழ், முருகன் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

I am eager to hear what you want to say. Please say it. here. :)