கள்ளழகர் கவசம்

உலகில் அனைவரும் நலம் பெற வேண்டி திருமாலிருஞ்சோலையில் எழுந்தருளும் கள்ளழகர் மீது அருள் வேண்டி எழுதிய கவசம். நிறை குறை அனைத்தும் அவன் பொறுப்பு. எழுதிய கருவி என்று மட்டுமே என் இருப்பு.

பல்லவி
மாமதுரை ஓரத்திலே ஓர் மலையோ அழகர்மலை
மூலிகைகள் வேர்பிடித்தே ஓங்கியதோர் மருந்துமலை
நோயதனை தீர்த்திடுதே சீர் மலையே அழகர்மலை
நூபுரத்தின் ஓசையிலே பாய்ந்து வரும் கங்கைமலை

அனுபல்லவி
மலையடிவாரத்திலே நின்றநெடுங்கோலத்திலே
கள்ளழகர் காட்சி தரும் அழகுமலை
அமுதமும் ஊற்றெடுக்கும் உடல்நலம் தேற்றிவைக்கும்
கள்ளழகர் காவல் தரும் கருணைமலை
அந்தமலை நாயகனே அன்பினிலே தாயவனே
கண் திறந்து பார்த்துவிட்டால் குறையுமில்லை

கவசம்
உச்சந்தலையும் சிகைமுடி மண்டையும்
நெற்றிப் பகுதியும் இருபுறப் புருவமும்
ரெட்டைக் கண்களும் வளிவழி நாசியும்
எட்டும் ஒலிகளை பற்றிடும் செவிகளும்
செப்பிடும் வாயும் பற்களின் கூட்டமும்
கன்னக் கதுப்பும் அசையுறுந் தாடையும்
உண்டி விழுங்கும் ஒற்றைத் தொண்டையும்
அண்டி வந்தெங்கள் அழகர் காக்க

வலதிடமாக வளர் எழில் தோள்களும்
செய்யெனச் செய்யும் சீரிய கைகளும்
பகலிரவாகத் துடித்திடும் இதயமும்
உயிர்வளி நிரம்பிய இரு நுரையீரலும்
கூடெனக் காத்திடும் மார்பெனுங் கவசமும்
தனைப் புதுப்பிக்கும் அருங் கல்லீரலும்
குருதியின் கழிவுகள் நீக்கும் மண்ணீரலும்
உறுதி கொண்டெங்கள் அழகர் காக்க

நிமிர்ந்திடச் செய்யும் நீள்தண்டுவடமும்
வயிற்றின் கூரையாம் உதரவிதானமும்
உண்டது செரித்திட உதவிடும் இரைப்பையும்
சுருள்சுருளான சிறுகுடல் நீளமும்
கழிவினைத் தேக்கும் பெருங்குடற் பாதையும்
உப்புநீர் உறிஞ்சும் இரு சிறுநீரகம்
மலசலம் நீக்கும் உடலியற் பகுதியும்
சலபதி எங்கள் அழகர் காக்க

அமர்ந்திடச் செய்யும் புட்டமும் இடுப்பும்
மானிடர்க்கான உயிர் பிறப்புறுப்பும்
மேலுடல் தாங்கும் மாவலித் தொடையும்
நீட்டி மடக்கிடும் முழங்கால் மூட்டும்
முட்டியின் கீழ்வளர் கெண்டைக்கால்களும்
செழுங்கணுக்காலும் நடைபயில் பாதமும்
வெண்ணிற எலும்பும் அக்கும் ஆணியும்
குருதி சுரக்கும் எலும்பினுள் மஜ்ஜையும்
உணர்வுகள் கடத்தும் நீள் நரம்புகளும்
உயிர்ச் செந்நீரும் குருதியின் நாளமும்
அடிமுதல் முடிவரை அனைத்துப் பாகங்களும்
அன்பு கொண்டெங்கள் அழகர் காக்க

பெயர் தெரியாத பலவித நோய்களும்
உயிர்வரை உறுத்தும் உடலின் வாதையும்
உணர்வுகள் மரக்கும் மனவலி வேதனை
சனமும் நெருங்காது வேங்கடன் காக்க
சுடுகிற அனலும் குளிர்நிறை புனலும்
பெருவளிக் காற்றும் பொறுமை நிலமும்
உலகம் பரந்த முகிற்றொகை விசும்பும்
வெக்கையும் வெயிலும் தென்றல் காற்றும்
அன்னையின் அமுதாய் பொழியும் மழையும்
எட்டுத் திசையும் சுடர்க்கதிர் நிலவும்
எப்பவும் துணையாய் எட்டெழுத்து காக்க

தெரிந்தும் தெரியாமல் எழுகிற பகையும்
அறிந்தும் அறியாமல் புரிகிற பிழையும்
விடாது தொடரும் பாவபுண்யங்களும்
நமை அண்டாது அழகரின் பார்வையில்
அறிந்ததும் சிறிது தெரிந்தது சிறிது
உலக வாழ்க்கையினில் புரிந்ததும் சிறிது
எது எது நமக்கு தீங்கென ஆகுமோ
அது அது நம்மை நீங்குதல் ஆக்குமாம்
சௌந்தரராஜப் பெருமாள் நாமம்
எப்பொழுதாயினும் எத்திசையாயினும்
எந்நிலையாயிலும் எவ்விடமாயினும்
எண்ணிய பொழுதும் எண்ணாத பொழுதும்
புள்ளேறும் அரையன் புரிந்தெமைக் காக்க

எழுதிய கருவியாம் எளியவன் நானும்
படித்திடும் மானிடர் எவரெவர் ஆயினும்
குடும்பத்துடனே நலம் பெறக் காக்க
துயர்களும் களைந்திட தூயவன் காக்க
உடல் நலம் தேற உத்தமன் காக்க
மனநலம் வளம் பெற மாலவன் காக்க
அறிவினில் சுடர் வர அச்சுதன் காக்க
பலநலம் பெருக பத்மநாபன் காக்க
எட்டெழுத்தானே நாரணன் காக்க
திருமகள் துணைவன் திருமால் காக்க
வலம்புரி காக்க சுதர்சனம் காக்க
ஆண்டவன் சுமக்கும் கருடப்புள் காக்க
மாலிருஞ்சோலை மாயவன் காக்க
வெண்ணை வழிந்திட நூறு தடாவில்
பொங்கல் வைத்ததோர் கோயிலும் காக்க
வைகை இறங்கும் வள்ளல் காக்க
அழகர் நாமம் அனைவரைக் காக்க
நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க

—- முற்றும் —

அருள் வேண்டி,
ஜிரா

Pdf வடிவில் தரவிறக்கம் செய்ய…


Posted in அழகர்கோயில், இறை, தமிழ், திருமாலிருஞ்சோலை, பக்தி, விஷ்ணு | Tagged , , , , , , , , , , | 1 Comment

தளிர் தவழும் தரளம் – கருமாரி வேண்டல்

Karumariநேற்றிரவு உறங்கும் முன் திருவேற்காட்டு கருமாரி அன்னையின் நினைவு உந்த இந்தப் பாடல் பிறந்தது. பாடலின் சந்தத்தையும் கொடுத்துள்ளேன். நன்றாகப் பாடக் கூடியவர்கள் பாடிக் கொடுத்தால் மகிழ்வேன். பாடலையும் பொருளையும் கீழ்க்கொடுத்துள்ளேன். கருமாரியின் அருள்மாரி உலகெங்கும் நிறைந்து கொரொனாவின் கொடுந்தாண்டவத்தையும் வென்று மக்களைக் காக்கட்டும். உலகெங்கும் வேதனையும் பீதியும் பற்றி எரிகின்ற இன்றைய சூழலில் அன்னையின் குளிர்ந்த கருணை மழை வேண்டி குளிர்ந்த பொருட்களை பாட்டில் நிறைய வைத்துப் பாடியிருக்கிறேன். அன்னையின் அருள் உலகைக் காக்கட்டும்.

தனன தன தனன தன தனன தன தானா
தனன தன தனன தன தனன தன தானா
தனன தன தனன தன தனன தன தானா
தனதான தனதான தனதான தானா

தளிர்த வழு தரள பனி குளிர்வி ழியின் தாயே
களர்கி ளறி உழும ழையின் கருமு கிலி மாயே
வெளிர்ம திய நிறங்க ளென வதன மொளிர்ந் தாயே
பழிபாவத் தடுமாற்றம் தடம்மாற்று வாயே!

துருவ முறை இம்பளிங் கில் வெருகு நடை போலே
பெருங்க வலை வலைவி ழுந்த தளர்ம னதி னாலே
அருந்து முலை அருள்கி டைக்க அழும்ம தலை நானே
கருமாரி பெயரோதக் கருதாத நாயேன்!

சுகந்த மிகுந் தகந்த மிழைக் கனகப் பதத் தாலே
அகந்தை அற தகுந்த படி எனைமி திக்க லாமே
மிகுந்த புகழ் முருகப் படை வனப்ப தியுன் ஊரே
எளியேனுங் கடைத்தேற வழிகாட்டு வாயே!

படிக்க ஏதுவாக சீர் பிரித்த பின்…

தளிர்தவழு தரளபனி குளிர்விழியின் தாயே
களர்கிளறி உழுமழையின் கருமுகிலி மாயே
வெளிர்மதிய நிறங்களென வதனமொளிர்ந்தாயே
பழிபாவத் தடுமாற்றம் தடம் மாற்றுவாயே!

பசுந்தளிர்களில் தவழுகின்ற முத்துப் போன்ற வெண்பனியின் குளிர்ந்த பார்வை கொண்ட தாயே! களர் நிலங்கள் கூட கிளறி உழுகப்படும் வகையில் விசையோடு பொழிகின்ற மழையைத் தருகின்ற கருமுகிலின் நிறத்தவளே! வெளிர் நிறத்து நிலவின் நிறங்களைப் போல் திருமுகம் ஒளிர்கின்றவளே! இந்த உலகத்தின் பழிபாவங்களில் தடுமாறி விழுந்து கொண்டிருக்கும் என்னை தடம் மாற்றுவாயே!
தரளம் – முத்து
மாயே – கருமையானவளே
மதியம் – நிலவு
வதனம் -முகம்

துருவமுறை இம்பளிங்கில் வெருகு நடை போலே
பெருங்கவலை வலைவிழுந்த தளர்மனதினாலே
அருந்து முலை அருள்கிடைக்க அழும்மதலை நானே
கருமாரி பெயரோதக் கருதாத நாயேன்!

கருமாரி என்கின்ற உன் பெயரை என்றும் ஓதிடக் கருதாத நாயைப் போன்றவன் நான்! ஏனென்றால் பசித்து அன்னையின் முலையமுதம் வேண்டுகின்ற குழந்தையைப் போல நான் அழுதுகொண்டிருக்கிறேன். அதற்கு என்ன காரணம்? மானுட வாழ்வில் இன்பதுன்பங்களால் உண்டாகும் பெருங்கவலை என்னும் வலையில் விழுந்து, துருவங்களில் உறைந்திருக்கின்ற பனியாலான பளிங்குத் தரையினிலே நடக்கின்ற பூனைப் போன்று தளர்ந்த மனத்தவனாய் இருக்கிறேன்!
துருவமுறை – துருவம் + உறை
இம்/ஹிம் – பனி (ஹிமாச்சலம், ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ், ஹிமாம்பசந்த் மாம்பழம் – ஹிம் + ஆம் + பசந்த்)
வெருகு – பூனை
மதலை – குழந்தை

சுகந்த மிகுந்த கந்தமிழைக் கனகப் பதத்தாலே
அகந்தை அற தகுந்த படி எனைமிதிக்கலாமே
மிகுந்த புகழ் முருகப் படை வனப்பதியுன் ஊரே
எளியேனுங் கடைத்தேற வழிகாட்டுவாயே!

தாயே, நறுமணம் கமழும் சந்தனம் இழைக்கப்பட்ட உன்னுடைய பொன்னடிகளால், என்னுடைய அகந்தை அற்றுப் போகும்படி தகுந்த வகையில் என்னை மிதிக்கலாமே! உன் திருவடி பட்டால் உய்ய மாட்டேனா!!!
மிகுந்த புகழ் கொண்ட வேற்காட்டுப் பதி உன் ஊர். அங்கு வந்தாலும் வராவிட்டாலும் முட்டாளாகிய நான் கடைத்தேற வழிகாட்டுவாயே!
சுகந்தம் – நறுமணம்
கந்தம் – சந்தனம்
கனகம் – பொன்/தங்கம்
பதம் – திருவடிகள்
முருகப்படை – வேல்
வனம் – காடு
முருகப்படை வனம் – வேல் + காடு = வேற்காடு
பதி – இடம்/ஊர்

பாட்டிலும் பொருளிலும் இருக்கும் நிறைக்கும் குறைக்கும் அவளே பொறுப்பு! எனக்குத் தெரிந்து ஓரிடத்தில் சந்தம் பிசகியிருக்கிறேன். அதையும் வேறு பிசகுகளையும் கண்டால் சொல்லுங்கள்.

அன்புடன்,
ஜிரா

Posted in அம்மன், இறை, திருவேற்காடு | Tagged , , , , | 7 Comments

அதிரும் கழல் பணிந்து – திருப்புகழ்

உலகத்தில் பிறந்த எல்லாருக்கும் பொதுவானது ரெண்டு இருக்கு. இந்த ரெண்டும் இல்லைன்னு யாராவது சொன்னா அது பொய்.

1. இடர் (துன்பம்)
2. ஐயம் (சந்தேகம்)

கோடிக்கோடியா கொட்டி வைக்க இடமில்லாம இருப்பான். அவனுக்கும் எதாவது இடர் இருக்கும். சங்ககாலத்தில் கொற்கையிலிருந்த புரவிகளுக்கு ஒரு இடர் இருந்ததாம். முத்துக் குளிக்கும் கொற்கை செல்வச் செழிப்பான ஊர். அங்கிருக்கும் புரவிகளுக்கு புல்லுக்கும் புண்ணாக்குக்குமா பஞ்சம்? அதுவும் பாண்டிய மன்னன் தேரில் கட்டி ஓட்டும் புரவி. அப்புரவி சும்மா நடந்தாலே பெருமையாக நடக்கும். பாண்டியன் தேரில் கட்டிய புரவின்னா எவ்வளவு பீடுநடை போடும்!!! ஆனாலும் அதுக்கு ஒரு இடர். அந்தப் புரவிகள் நடக்கும் போது கால் குளம்பில் பொடிப்பொடி முத்துகள் ஏறி சிக்கிக்கொண்டு நடக்கவிடாமல் வடுக்களை உண்டாக்கி இடர் படுத்துமாம். “முத்தம் கவர்நடைப் புரவி கால் வடுத்த புக்கும் நற்றேர் வழுதி கொற்கை”ன்னு அகநானூறு வெண்கண்ணனார் சொல்றாரு. மத்த ஊர் குதிரைகளுக்கெல்லாம் கால்ல மண்ணோ கல்லோ ஏறி துன்பம்னா… கொற்கைப் புரவிக்கு முத்தினால் துன்பம்.

நெருஞ்சி முள்ளோ தங்க ஊசியோ! குத்துவது குத்தியே தீரும். எவ்வளவு வசதி வாய்ப்புகள் பதவிகள் இருந்தாலும் கொற்கைப் புரவி போல எதாவது இடர் இருந்துக்கிட்டே இருக்கும். அதுதான் வாழ்க்கை.

mrugan-3அடுத்தது ஐயம். இந்த நொடியில் உங்க மனசுக்குள்ள ஒரு சந்தேகம் ஓடிக்கிட்டிருக்கும். இது முடியுமா முடியாதா நடக்குமா நடக்காதா கிடைக்குமா கிடைக்காதா? இந்த ஐயங்களிலேயே பெரிய ஐயம் வருங்காலத்தைப் பத்திதான் இருக்கும். “எவ்வளவோ பாத்துட்டோம். இதப் பாத்துற மாட்டோமா”ன்னு அறிவு சொல்லும். ஆனாலும் எங்கயோ ஒரு மூலையில் சின்ன சந்தேகம் இருக்கும்.

நம்முடைய வாழ்க்கை அப்படியே நிக்காத தேர் மாதிரி போயிக்கிட்டே இருக்க விடாம முட்டுக்கட்டை போடுறது இது ரெண்டுதான்.

நாம கலங்கியிருக்கும் போது வேண்டப்பட்ட நல்ல மனிதர்கள் கையப் பிடிச்சிக்கிட்டாலே தெம்பா இருக்கும். ஆண்டவனோட கையையும் காலையும் பிடிச்சிக்கிட்டா? கடவுள் இருக்காரு இல்லைங்குறது ஒரு வாதம். ஆனா நாம சொன்னா காது கொடுத்து கேக்கவாவது ஒருத்தர் இருக்காரேங்குற நம்பிக்கைதான் பலம்.

அதைத்தான் “இதயம்தனில் இருந்து கிருபையாகி இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே”ன்னு அருணகிரிநாதர் “அதிரும் கழல் பணிந்து” திருப்புகழில் சொல்றாரு.

அதிருங் கழல் பணிந்து உன் அடியேன் உன்
அபயம் புகுவதென்று நிலைகாண
இதயந் தனிலிருந்து கிருபையாகி
இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே!

காலில் அணிந்திருக்கும் கழலின் ஓசையை வைத்தே நடையின் தன்மையைச் சொல்லிவிடலாம். அச்சநடை, அன்னநடை, ஆசைநடை, ஆவேசநடை, அரசநடைன்னு கழலோசை காட்டிக் கொடுத்துவிடும்.

முருகன் நம்மை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் உறுதியான அடிகள். அப்படி நடந்துவரும் போது கழல் அதிரும். அப்படியான கழல் அணிந்த முருகனின் அடியவன் முருகனிடத்திலே அவனையே புகல் என்று அடைய வேண்டுமானால், இடரும் ஐயமும் நீங்க வேண்டும். மனதில் எந்தத் துன்பமும் சந்தேகமும் இல்லாமல் இருந்தால்தான் இறைவனைப் புகலடைய முடியும். அந்த இடரும் சங்கையும்(சந்தேகம்) நீங்க வேண்டுமானால் முருகக் கடவுள் இதயத்திலிருந்து அருள் செய்ய வேண்டும். அதைத்தான் பாட்டின் முதல்வரியாகச் சொல்லியிருக்கிறார் அருணகிரி.

எதிர் அங்கொருவர் இன்றி நடமாடும்
இறைவன் தனது பங்கில் உமைபாலா
பதி எங்கிலும் இருந்து விளையாடிப்
பல குன்றிலும் அமர்ந்த பெருமாளே!

ஆடல்வல்லானாகிய சிவபெருமான் ஆடும் போது யாரும் எதிராட முடியாதாம். அந்த மாதொரு பாகனுடைய ஒரு பாகமாக இருக்கும் உமையவளின் மைந்தனாகிய முருகனே! நீ எப்படிப் பட்டவன் தெரியுமா? ஒவ்வொரு ஊரிலும்(பதி) இருந்து விளையாடி பல குன்றுகளிலும் அமர்ந்த பெருமாள் நீ!

எளிமையான திருப்புகழ்தான். பாடுவதற்கான சந்தமும் எளிமைதான்.

CZ-Muruganஅதிருங் கழல்ப ணிந்து …… னடியேனுன்
         அபயம் புகுவ தென்று …… நிலைகாண
இதயந் தனிலி ருந்து …… கிருபையாகி
         இடர்சங் கைகள்க லங்க …… அருள்வாயே
எதிரங் கொருவ ரின்றி …… நடமாடும்
         இறைவன் தனது பங்கி …… லுமைபாலா
பதியெங் கிலுமி ருந்து …… விளையாடிப்
         பலகுன் றிலும மர்ந்த …… பெருமாளே!

கொடுமுடி திரு தியாகராஜ தேசிகர் குரலில் இந்தத் திருப்புகழை இந்தச் சுட்டியில் தேடிக் கேட்டு மகிழுங்கள்.

அன்புடன்,
ஜிரா

Posted in அகநானூறு, அருணகிரிநாதர், இறை, இலக்கியம், கொற்கை, தமிழ்ப் பெரியோர், திருப்புகழ், பக்தி, முருகன் | Tagged , , , , , , , | 1 Comment

இராசராசன் பள்ளிப்படை (சமாதி) – 2

சென்ற பதிவை இந்தச் சுட்டியில் படிக்கலாம்.

முதலில் உடையாளூர் கைலாசநாதர் கோயில்தான் இராசராசனின் பள்ளிப்படை என்று சொல்கிறவர்கள் முன்னிறுத்தும் கருத்துகளைப் பார்ப்போம்.

Raja raja Chozha 31. இராசராசனின் சிவபாதசேகரன் பெயருக்கு ஏற்றவாறு, இந்தக் கோயிலில் துவாரபாலகர் காலடியிலும் ஒரு சிற்பம் உள்ளது. அதை இராசராசன் என்கிறார்கள்.

rajarajan painting comparison2. அந்தச் சிற்பம் இராசராசனுடையது என்பதை எப்படிச் சொல்கிறார்கள்? காலடியில் இருக்கும் சிறு சிலையானது அரசச்சின்னங்களோடு இல்லை. இராசராசன் காசிப் பயணத்துக்குப் பின் அகோரி ஆகிவிட்டார். தஞ்சைப் பெரிய கோயிலில் இராசராசன் தன் மனைவியரோடு நிற்கும் ஓவியத்தில் இராசராசனுடைய உடை அரச உடையாக இல்லாமல் அகோரியின் உடை பாவனையோடு இருக்கிறார். அவருடைய மனைவியர் ஆடம்பராமாக இருக்கிறார்கள். அந்த ஓவியத்தையும் சிற்பத்தையும் ஒப்பிட்டு இராசராசன் என்று கூறுகிறார்கள்.(சடைமுடியை இறுக்கி தலையில் கட்டியிருப்பது, மீசை, தாடி, எளிய உடைகள்) வாசலின் இடப்பக்கமும் துவாரபாலகரின் காலடியில் ஒரு சிறு சிலை உள்ளது. அது அந்தக் கோயிலைக் கட்டிய (அல்லது) எடுத்துக்கட்டிய முதலாம் குலோத்துங்கச் சோழன் என்கிறார்கள்.

3. பாற்குளத்தம்மன் கல்வெட்டில் சிவபாதசேகரன் திருமாளிகை என்று குறிப்பிடப்பட்டது சிவபாதசேகரன் துஞ்சும் திருமாளிகை என்றொரு கருத்தும் சொல்கிறார்கள்.

4. இராசராசன் அகோரியாக இருந்ததால் இறந்தபின் எரியூட்டப்படாமல் அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்டுள்ளார் என்றொரு கருத்தும் சொல்கிறார்கள்.

5. ஆகம சாத்திரத்தின்படி பள்ளிப்படைக் கோயிலின் விமானம் சதுரமாகவும் அதன் அடிப்பகுதி ஒன்பது தச்சு முழம் கொண்டதாகவும் இருக்க வேண்டும். கைலாசநாதர் கோயிலின் விமானம் இந்த இலக்கணப்படி இருக்கிறது. ஆகவே அது பள்ளிப்படைக் கோயில்தான்.

6. கோயிலின் தென்மேற்கில் வடக்கிலிருந்து இராசராசன் அழைத்து வந்த பாசுபத சைவப் பார்ப்பனர்களின் அக்கிரகாரம் இருப்பதும் பள்ளிப்படைக் கோயிலின் ஆகமவிதி என்கிறார்கள்.

அடுத்து கைலாசநாதர் கோயில் இராசராசனின் பள்ளிப்படை இல்லை என்பவர்கள் மேற்சொன்ன கருத்துகளை எப்படி மறுதலிக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

1. துவாரபாலகரின் காலடியில் இருக்கும் சின்னஞ்சிறு சிலைகள், அந்தச் சிலைகளைச் செதுக்கிய தச்சர்கள். போகர் மற்றும் துவாரபாலகர்கள் காலடியில் இருப்பவர்கள் தச்சர்கள். அவர்கள் இராசராசனோ குலோத்துங்கனோ அல்லர்.

2. பாற்குளத்தம்மன் கோயில் கல்வெட்டு சொல்லும் திருமாளிகை, இராசராசன் தங்கியிருந்த மாளிகை. அதன் முன்னால் இருந்த மண்டபம் சிதைந்ததால் மாற்றப்பட்டுள்ளது. அவ்வளவே அதன் பொருள். பள்ளிப்படையை திருமாளிகை என்று சொல்லும் வழக்கம் இல்லை.

3. கைலாசநாதர் கோயிலில் இதுவரை கிடைத்த கல்வெட்டுகளில் இராசராசன் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. அவை கோயிலுக்களித்த தானங்களைப் பற்றியும் நடந்த பணிகளைப் பற்றியும் அது தொடர்பானவர்களைப் பற்றியும் உள்ளது.

4. இராசராசன் அகோரியாக வாழ்ந்திருந்தாலும் எரியூட்டப்படாமல் புதைக்கப்பட்டார் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. (எரியூட்டப்பட்டிருக்கலாம் என்பதற்கும் எந்தச் சாற்றும் இல்லை).

இப்படியாக வரலாற்றாய்வாளர்கள் பலவிதமான கருத்துகளை முன் வைக்கிறார்கள். இதையெல்லாம் விட ஒரு கருத்து படித்தேன். பாண்டியர் மேல் பரிதாபம் தான் வந்தது. அதாவது சாய்ந்த நிலையிலிருக்கும் சிவலிங்கம் ராசராசனின் பள்ளிப்படைதான். ஏன் அது அப்படி இருக்கிறதென்றால், (மதுரை மீட்ட) சுந்தரபாண்டியன் 250 ஆண்டுகளுக்கும் மேலான அடக்குமுறையிலிருந்து பாண்டியர்களை எழுச்சி கொள்ளச் செய்து சோழர் மீது படையெடுத்த போது இராசராசனின் பள்ளிப்படையையும் இடித்துவிட்டான் என்பதுதான் அந்தக் கருத்து.

சோழ மன்னர்களால் பலவிதமான அடக்குமுறைகளுக்கும் அவமான இழிவுகளுக்கும் ஆளான பாண்டியர்கள் மீண்டெழுந்து சுந்தரபாண்டியன் தலைமையில் தாக்கும் போது பெருவெறி கொண்டு தாக்கியது உண்மைதான். சோழர்களின் அரச கட்டிடங்களை இடித்ததும் உண்மைதான். பாண்டிய நாடு இனி சோழநாட்டின் ஒரு பகுதி. இனி அங்கு மணிமுடி சூட்டி பதவியேற்கும் அரசவை தேவையில்லை என்று சொல்லி மதுரையிலிருந்த பழம்பெரும் அரசவையை சோழன் இடித்ததையும் அவர்கள் மறக்கவில்லை. அந்த வெறியோடு சோழர்கள் பலகாலம் முடிசூட்டிக் கொண்ட கங்கை கொண்ட சோழபுரத்து ஆயிரங்கால் மண்டபத்தில் சுந்தரபாண்டியன் தன்னை சோழ மன்னனாகவும் முடிசூட்டிக் கொண்டதும் உண்மைதான். அப்படி முடிசூட்டிக்கொண்ட பிறகு அந்த அரசவை மண்டபத்தை இடித்து அங்கு கழுதையை வைத்து உழுது எள் விதைத்ததும் உண்மைதான். ஆனால் அதே சுந்தரபாண்டியன் தான் பட்டினப்பாலை இயற்றிய கடியலூர் உருத்திரங்கண்ணனாருக்கு கரிகாற்சோழன் பரிசளித்து மதிப்பு செய்த மண்டபத்தை இடிக்கக் கூடாது என்றும் சொன்னவன்.

முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனுக்கு இருந்த சினமெல்லாம் சோழர்கள் பாண்டியர்களுக்குச் செய்த அடக்குமுறையாலும் அவமானத்தாலும் உண்டான சினம். அதை அவன் அரசியலாக எங்கு காட்ட வேண்டுமோ அங்கு மட்டுமே காட்டினான். இத்தனைக்கும் சுந்தரபாண்டியன் இடித்துவிட்டான் என்று இவர்கள் சொல்லும் பள்ளிப்படைக்கு அருகிலுள்ள பட்டீசுவரத்தில்தான் இராசேந்திரன் தன் சிற்றன்னை பஞ்சவன் மாதேவிக்கு கட்டிய பள்ளிப்படை கோயில் நெட்டுக்குத்தலாக இன்றும் நின்றுகொண்டிருக்கிறது. (பழுவேட்டரையர் வீட்டுப் பெண்ணான பஞ்சவன்மாதேவி இராசராசனின் மனைவியரில் ஒருவர்)

gangaikondachozhapuramசரி. இராசராசன் பள்ளிப்படை குறித்து இப்போதிருக்கும் சான்றுகளை வைத்துப் பார்த்தால், குறிப்பிட்ட இடம்தான் இராசராசனின் பள்ளிப்படை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இன்னும் யோசித்தால் பஞ்சவன் மாதேவிக்கு பள்ளிப்படை கட்டிய இராசேந்திரன் தன்னுடைய தந்தைக்கு பள்ளிப்படை கட்டினானா என்பதே ஐயமாக இருக்கிறது. இந்த ஐயத்துக்கு இராசேந்திரன் ஐம்பது வயது வரையிலும் இளவரசனாகவே இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். அதுமட்டுமில்லாமல் தஞ்சையை விட்டுவிட்டு கங்கை கொண்ட சோழபுரத்துக்கு தலைநகரை மாற்றிக் கொண்டும் போய்விட்டான். (சோழர்கள் ஆட்சியில் நீண்ட நாட்கள் தலையூராக இருந்த பெருமை கங்கை கொண்ட சோழபுரத்துக்கு உண்டு. இராசேந்திரன் இறந்ததும் தஞ்சை மாவட்டதில் அல்ல. கங்கை கொண்ட சோழபுரம் இருக்கும் அரியலூர் மாவட்டமும் அல்ல. திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு அருகிலுள்ள பிரம்மதேசம் என்ற ஊர். இங்குதான் இராசேந்திரனோடு அவன் மனைவியும் உடன்கட்டை ஏறியிருக்கிறார்.)

இப்போது நீதிமன்றத்தின் தலையீட்டினால் ஆய்வு செய்கிறவர்கள் என்ன கிடைத்தால் இராசராசனின் பள்ளிப்படையை உறுதி செய்ய முடியும்?

வேறென்ன? கல்வெட்டு அல்லது செப்பேடு கிடைத்தால்தான் உறுதி செய்ய முடியும். வெறும் இடிக்கப்பட்ட மண்டபங்களின் தூண்களோ பாகங்களோ கிடைத்தால் அதை மட்டும் வைத்து பள்ளிப்படை என்ற முடிவுக்கு வர முடியாது. பள்ளிப்படையாக இருக்கலாம் என்று ஊகம் மட்டுமே மிஞ்சும். அதைத்தான் ஏற்கனவே செய்து கொண்டிருக்கிறோமே. இராசராசன் சமாதி என்று வாட்சப்களில் வலம் வரும் சிவலிங்கம் ஆற்றோட்டத்தில் அடித்துவரப்பட்ட சிவலிங்கமாகவும் இருக்கக்கூடும் என்றும் ஒரு கருத்துண்டு.

ஒருவேளை இன்றிருக்கும் தொழில்நுட்பத்தால் பூமிக்கடியில் தோண்டாமலே உள்ளே எலும்புக்கூடு எதையும் கண்டுபிடித்தால்? கண்டுபிடிக்கலாம். ஆனால் அது யாருடையது என்று எப்படி முடிவுக்கு வருவது? சிக்கல்தான். வெளிநாட்டில் ஏசுநாதரின் கல்லறையை தேடிக் கொண்டிருக்கிரார்களாம். ஒருவேளை ஏசுநாதருடைய கல்லறையையே கண்டுபிடித்தாலும் கூட அது அந்தக் காலத்தில் அதே பெயரில் வாழ்ந்த அறுநூறு பேர்களின் ஒருவரின் கல்லறை என்ற அளவிலேயே முடிவுக்கு வரமுடியுமாம்.

நேர்மையான வரலாற்றாய்வாளர்கள் ஊகங்களை மட்டும் எடுத்துக் கொள்வதில்லை. போதுமான சான்றுகள் இருந்தால் மட்டுமே, அதலிலுள்ள இடைவெளிகளில் ஊகங்களை இட்டு நிரப்புவார்கள். அப்படி எதுவும் கிடைக்கும் வரை இராசராசனின் பள்ளிப்படை குறித்து எந்தத் தெளிவான முடிவுக்கும் வரமுடியாது.

இராசராசனின் பள்ளிப்படையோ இராசேந்திரனின் பள்ளிப்படையோ தெரிய வந்தால் மகிழ்ச்சிதான். அது வரலாற்றின் தெரியாத பல உண்மைகளையும் வெளிக்கொண்டு வரலாம். அப்படியான சான்றுகள் இப்போது நடக்கும் ஆய்வில் கிடைக்கும் என்று நம்புவோம். ஊகங்களின் அடிப்படையில்தான் எந்த ஆய்வும் நடக்கும். ஆனால் ஒரு குறிப்பிட்ட இடத்தை இராசராசனின் பள்ளிப்படை என்றே முடிவு செய்துவிட்டு, அந்த முடிவுகளை நிரூபிப்பதற்கே ஆதாரங்களைத் தேடுவது வரலாற்று நோக்கில் எவ்வளவு பயன் கொடுக்கும் என்று தெரியவில்லை. நாளை சான்றுகள் எதுவும் கிடைக்காவிட்டால் வெறும் ஏமாற்றமே மிஞ்சும். அதுவுமில்லாமல் உறுதி செய்யாத ஒரு இடத்தை இராசராசன் பள்ளிப்படை என்று கொண்டாடுவது இராசராசனுடைய பெருமைக்கு ஏற்புடையதாக இருக்குமா என்பதையும் உங்கள் கருத்துக்கே விட்டுவிடுகிறேன்.

காத்திருப்போம் சான்றுகளுக்காக.

அன்புடன்,
ஜிரா

பி.கு – நான் படித்த கேள்விப்பட்ட தகவல்களை இங்கு பகிர்ந்துள்ளேன். இதைவிட இன்னும் தகவல்கள் இருந்தால், அல்லது இதில் தவறுகள் இருந்தால் பின்னூட்டமிடுங்கள். அவற்றையும் பதிவில் சேர்த்துவிடுகிறேன். – நன்றி

Posted in ஆதித்த கரிகாலன், இராசராசச் சோழன், இராசேந்திரச் சோழன், உடையாளூர், ஊர்கள், கங்கை கொண்ட சோழபுரம், செய்யாறு, தஞ்சை, பஞ்சவன் மாதேவி, பழையாறை, பிரம்மதேசம், மாறவர்மன் சுந்தரபாண்டியன், முதலாம் குலோத்துங்கச் சோழன், வரலாறு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 2 Comments

இராசராசன் பள்ளிப்படை (சமாதி) – 1

இராசராசசோழனின் சமாதி பற்றி வலைத்தளங்களில் பல கருத்துகள் உலவுகின்றன. இராசராசன் சமாதி கேட்பாரற்று கிடப்பதாக பலர் வேதனைப்பட்டு வெதும்பி வருந்தியிருந்தார்கள். இது நீதிமன்றம் வரை சென்று நீதிபதிகளும் ஆய்வு மெற்கொள்ளும்படி தீர்ப்பளித்திருக்கிறார்கள். ஆய்வும் கூட தொடங்கிவிட்டது. இராசராசன் அடக்கம் செய்யப்பட்ட இடம் குறித்து சில நாட்களுக்கு முன்பு தெரிந்து கொண்ட தகவல்களை இங்கு தெரிவிக்கிறேன். நாளை ஆய்வுகளின் முடிவுகள் எப்படியிருந்தாலும் ஓரளவு எளிதாகப் புரிந்துகொள்ள இப்பதிவு உதவலாம்.

இந்தத் தகவல்கள் என்னுடைய ஆய்வின் முடிவுகள் அல்ல. வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லி/எழுதி கேள்விப்பட்ட விவரங்கள். தேடிப்படித்த கல்வெட்டுகள் சொன்ன செய்திகள்.

முதலில் இராசராசனின் சமாதி என்று பலரால் சொல்லப்படும் உடையாளூரிலுள்ள சாய்ந்த லிங்கம் நடப்பட்டுள்ள இடத்தைப் பற்றிப் பார்க்கலாம்.

பொதுவாக போரில் இறந்த மன்னர்களுக்கு நடுகல் நட்டு எழுப்பப்படுவதே பள்ளிப்படை எனப்படும். ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு சோழர்கள் பள்ளிப்படைக் கோயிலாக எழுப்பத் தொடங்கினார்கள். மன்னர்களுக்கு மட்டுமின்றி அவர்களது மனைவி மக்களுக்கும் புலவர்களுக்கும் படைத்தலைவர்களுக்கும் எழுப்பும் வழக்கமும் வந்தது. சிவலிங்கம் வைத்து கோயிலாக செங்கற்றளி எழுப்புவது பெருவழக்கமாக இருந்தது.

சரி. இராசராசன் சமாதி எனப்படும் இடத்துக்கு வருவோம். பொதுவாக பள்ளிப்படைக் கோயில்களில் சிவலிங்கம் பீடத்தோடு அமைக்கப்படும் நிலையில், பீடம் இல்லாமல் சாய்ந்த நிலையில் லிங்கம் அமைக்கப்பட்டிருப்பது எதைக் குறிப்பிடுகிறது? சுற்றிலும் செங்கற்றளி இருந்ததற்கான எந்த அடையாளமும் இல்லாமலிருப்பது எதனால்?

Udaiyaloor 1அகால மரணமடைந்தவர்களுக்கு எழுப்பப்படும் பள்ளிப்படையில் சிவலிங்கத்துக்கு பீடம் அமைப்பதில்லையாம். அதேபோல கூரை வைத்து கோயில் எழுப்பும் வழக்கமும் இல்லையாம். அதோடு லிங்கம் மேற்குப் பக்கம் சாய்ந்திருப்பது அகால மரணத்தையோ, இயற்கை மரணமாக இல்லாதிருப்பதையோ, கொலை செய்யப்பட்டிருப்பதையோ குறிக்குமாம். இராசராசசோழன் அகால மரணமடையவில்லை. மூப்பில் உண்டான இயற்கையான இறப்பு. இராசராசசோழன் அகால மரணமடையவில்லை. அப்படியானால் அது யாருடைய பள்ளிப்படையாக இருக்கக்கூடும்? கடம்பூரில் படுகொலை செய்யப்பட்ட ஆதித்த கரிகாலனின் பள்ளிப்படையாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இன்று அந்த சிவலங்கத்துக்கு பீடம் அமைப்பதும் கூரை வைத்து கோயில் எழுப்பும் வேலையும் நடந்துகொண்டிருக்கின்றன. அது ஆதித்த கரிகாலனின் பள்ளிப்படையாக இருப்பின் இவையெல்லாம் பள்ளிப்படை விதிகளுக்கு புறம்பாகச் செய்யப்படுபவை ஆகும். ஆதித்தகரிகாலன் பள்ளிப்படையை இராசராசன் பள்ளிப்படை என்று கூறுவது, அந்தப் பள்ளிப்படை அமைந்திருக்கும் இடத்துக்கு உரிமையாளர்களுக்குத்தான் வருமானம் கொடுக்கும்.

அப்படியானால் இராசராசனின் பள்ளிப்படை எங்கே? அப்படியொன்று இருக்கிறதா?

அண்ணன் ஆதித்த கரிகாலனின் பள்ளிப்படைக்கு மிக அருகில்தான் இராசராசனின் பள்ளிப்படையும் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அந்தப் பகுதியில் பால்குளம் என்றொரு குளம் உள்ளது. அதன் அருகில் பால்குளத்து அம்மன் என்றொரு கோயிலும் உள்ளது. இராசராசனுக்கு பாற்படை செய்துவிட்டு இராசேந்திரச் சோழன் கைகளைக் கழுவிய குளமாதலால் பால்குளம் என்ற பெயர் வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

paal-kulathamman.jpgபால்குளத்து அம்மன் கோயிலிருக்கும் ஒரு கல்வெட்டு மிகமிகக் குறிப்பிடத்தக்கது. அந்தக் கல்வெட்டு முதலாம் குலோத்துங்கச் சோழனின் நாற்பத்திரண்டாவது ஆட்சியாண்டியில் வெட்டப்பட்டது. முதலாம் குலோத்துங்கச் சோழனுக்கு சுங்கம் தவிர்த்த சோழன் என்றொரு சிறப்புப் பெயரும் உண்டு. தந்தை வழியில்தான் மரபும் மரபணுவும் தொடர்கிறது என்று நம்புகிறவர்களுக்கு குலோத்துங்கன் தெலுங்கன். வரலாற்றார்வலர்களுக்கு இவன் சாளுக்கிய சோழன். இரண்டாம் இராசேந்திரச் சோழனின் மகள் அம்மங்கை தேவி வழிப் பேரன். இவனுக்குப் பிறகு சோழப் பேரரசு முடிவுக்கு வரும் வரையில் முதலாம் குலோத்துங்கனின் வழிவந்தவர்களே சோழநாட்டை ஆண்டவர்கள்.

முதலாம் குலோத்துங்கனின் இயற்பெயர் அநபாய சாளுக்கியன். இவனது தந்தை இராஜராஜ நரேந்திர சாளுக்கியன் என்னும் கீழைச் சாளுக்கிய மன்னன். ராஜமுந்திரி என்ற பேரூரை உருவாக்கியவன் இந்த மன்னனே.

கதைக்கு வருவோம். அநபாய சாளுக்கியனானவன் குலோத்துங்க சோழன் ஆனது எப்படி? இரண்டாம் இராசேந்திரச் சோழனின் மகன் இராசமகேந்திரன் தந்தைக்கு முன்பே இறந்துவிட்டான். அதனால் இரண்டாம் இராசேந்திரனின் தம்பி வீரராசேந்திரன் பதவிக்கு வருகிறான். அவனுக்குப் பிறகு அவனது மகனான அதிராசேந்திரன் பதவிக்கு வருகிறான். சோழ மன்னர்களிலேயே மிகக்குறுகிய காலம் ஆட்சி செய்தது இவனேயாவான். பதவியேற்ற அதே ஆண்டில் இறந்துவிடுகிறான்.

இவனுடைய இறப்பும் சற்று சர்ச்சைக்குரியது. சைவ வைணவப் பூசல் மிக மலிந்திருந்த காலகட்டம் அது. வைணவர்களுக்கு பலவிதமான இன்னல்களும் ஊறுகளும் உண்டாக்கப்பட்டதாகவும் அதற்கும் அதிராசேந்திரனின் இறப்புக்கும் தொடர்பு இருப்பதாக சில வரலாற்றாய்வாளர்கள் கருதுகிறார்கள். இதை இன்னும் ஆழமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆதிராசேந்திரனுக்குப் பிறகு இராசராசன் வம்சத்தில் ஆண்வழி வந்த நேரடி மகன் இல்லாத சூழலில் சிலபல எதிர்ப்புகளையும் மீறி அநபாய சாளுக்கியன் தன்னை குலோத்துங்க சோழனாக முடிசூட்டிக் கொள்கிறான். சிறு வயதிலிருந்தே மாமா வீரராசேந்திரனோடு இருந்து வளர்ந்ததாலும் போர்க்களங்களுக்குச் சென்றதாலும் சோழநாட்டின் அமைப்பும் அரசியலும் நன்கு தெரிந்தவனாகவே இருந்திருக்கிறான். அன்று இருந்த அரசியல் சூழலில் குலோத்துங்கச் சோழன் இல்லாமல் இருந்திருந்தால் பாண்டியர்களால் சோழப் பேரரசு அப்போதே வீழ்ந்திருக்கலாம். அந்த வீழ்ச்சியை எட்டு தலைமுறைகளுக்கு தள்ளிப் போட்ட பெருமை முதலாம் குலோத்துங்கனுக்கு உண்டு. அதுமட்டுமின்றி சோழப் பேரரசை அரைநூற்றாண்டுகள் ஆட்சி செய்த பெருமைக்குரியவன். இராசராசனுக்கும் இராசேந்திரனுக்கும் கூட இந்தப் பெருமை கிடையாது.

அந்தக் குலோத்துங்கச் சோழன் காலத்துக் கல்வெட்டுதான் பால்குளத்தம்மன் கோயிலில் உள்ளது. அந்தக் கல்வெட்டு என்னதான் சொல்கிறது?

paalkulathamman - 21 ஸ்வஸ்திஸ்ரீ ஸகலபுவந சக்கரவர்த்திகள் ஸ்ரீகு
2 லோத்துங்க சோழ தேவற்கு யாண்டு நாற்ப
3 த்திரண்டாவது ஸ்ரீசிவபாதசேகரமங்கலத்து
4 எழுந்தருளிநின்ற ஸ்ரீராஜராஜதேவரான ஸ்ரீ
5 சிவபாதசேகரதேவர் திருமாளிகை முன்பில்
6 பெரிய திருமண்டப முன்[பி]லடுப்பு ஜீர்
7 ந்நித்தமையில் இம்மண்டபம் எடுப்பி
8 த்தார் பிடவூர் (பிடவூர் வேளான்) வேளா
9 ன் அரிகேசவனாந கச்சிராஜற்காக இவ்வூர்
10 நாயகம் செய்து நின்ற ஜயசிங்ககுலகா
11 ல வளநாட்டு குளமங்கல நாட்டு சா
12 த்தமங்கலத்து சாத்தமங்கலமுடை
13 யான் நம்பிடாரன் நாடறிபுகழன் இ
14 வருடன் விரதங்கொண்டு செய்தார் இ
15 வ்வூர் பிடாரகளில் ராஜேந்த்ரசோழனு
16 தைய நாயகநான ஈசானசிவரும் தேவ
17 நபயமாந அறங்காட்டி பிச்சரும்

இந்தக் கல்வெட்டு முழுமையானதா எனத் தெரியவில்லை. இதோடு சேர்த்து வெட்டப்பட்ட மற்ற கல்வெட்டுகள் கிடைத்தால் இன்னும் பல விவரங்கள் தெரியலாம். போகட்டும். கல்வெட்டு சொல்லும் சுருக்கமான தகவலைப் பார்க்கலாம்.

அனைத்து உலகங்களுக்கும் சக்கரவர்த்தியான ஸ்ரீகுலோத்துங்க சோழ தேவரின் நாற்பத்தியிரண்டாவது ஆட்சியாண்டில், ஸ்ரீசிவபாதசேகரமங்கலத்தில் எழுந்தருளி நின்ற ஸ்ரீராஜராஜதேவரான ஸ்ரீசிவபாதரசேகரதேவரின் திருமாளிகை முன்பு, பெரிய மண்டபம் ஜீர்நித்தமையால் (சிதைந்தமையால்) பிடவூரைச் சேர்ந்த வேளாளனான அரிகேசவனான கச்சிராஜன் இந்த மண்டபத்தை எடுப்பித்தார். அரிகேசவனான கச்சிராஜனுக்காக சோழநாட்டிலுள்ள (ஜயசிங்கன் குலத்தை அழித்தவரின் வளநாட்டைச் சேர்ந்த குளமங்கல நாட்டைச் சேர்ந்த) சாத்தமங்கலத்து பிடாரனான (சிவன்கோயில் பூசாரி) நாடறிபுகழன் இந்த வேலையை விரதங்கொண்டு மேற்கொண்டார். அவரோடு இவ்வூர் பிடாரர்களில் ராஜேந்திரசோழன் உதையநாயகனான ஈசான சிவரும் தேவன் அபயம் ஆன அறங்காட்டி பிச்சரும் இணைந்து இப்பணியை மேற்கொண்டனர்.

அதாவது சிவபாதசேகரமங்கலத்தில் (இன்றைய உடையாளூரில்) இராசராசனின் திருமாளிகை ஒன்றிருந்திருக்கிறது. அதன் முன்பிருந்த மண்டபம் விழுந்துவிட்டபடியால் பிடவூரைச் சேர்ந்த வேளாளன் அரிகேசவன் என்னும் கச்சிராஜன் எடுத்துக் கட்டுகிறான். அதாவது அவன் பொருள் அளிப்பவன். அவன் கொடுத்த பொருட்களைக் கொண்டு சாத்தமங்கலத்தைச் சேர்ந்த பிடாரன் நாடறிபுகழனும், சிவபாதசேகரமங்கலத்து உள்ளூர் பிடாடர்களான ஈசான சிவரும் அறங்காட்டி பிச்சரும் மண்டபத்தை எடுத்துக் கட்டுகிறார்கள்.

இராசராசனுடைய விருப்பப் பெயர் சிவபாதசேகரன். தன்னை அப்படி அழைத்துக் கொள்வதை அவன் மனம் மிகவும் விரும்பியிருக்கிறது. இராசேந்திரனுக்கும் சிவசரண சேகரன் என்றொரு பெயருண்டு.

இராசராசனின் மாளிகை இருந்ததால் ஊருக்கும் சிவபாதசேகரமங்கலம் என்றே பெயராகிவிட்டது. அந்நாளில் மங்கலம் என்று முடியும் ஊர்கள் பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட பிரம்மதேய ஊர்களாக இருக்கும். இன்றும் இவ்வூரில் பால்குளத்துக்கு அருகில் ஒரு அக்கிரகாரம் உண்டு. அங்குதான் வடக்கிலிருந்து அழைத்து வந்த பாசுபத சைவ பிராமணர்களை இராசராசன் குடிவைத்தான். அவர்களின் வழித்தோன்றல்கள் இன்னும் அங்கிருக்கிறார்களாம். ஆனால் நடையுடை பாவனை மொழி உணவு என தமிழர்களாகத்தான் இருக்கிறார்கள். அருகில் ஒரு கைலாசநாதர் கோயிலும் இருக்கிறது.

இந்தக் கைலாசநாதர் கோயில்தான் இராசராசனின் பள்ளிப்படை என்பது சில வரலாற்றாய்வளர்களின் முடிவு. இக்கோயில் இராசராசனின் பள்ளிப்படை இல்லை என்பது வேறுசில ஆய்வாளர்களின் முடிவு. இருவரும் சொல்லும் காரணங்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்,
ஜிரா

அடுத்த பதிவை இந்தச் சுட்டியில் படிக்கவும்.

Posted in ஆதித்த கரிகாலன், இராசராசச் சோழன், உடையாளூர், ஊர்கள், தஞ்சை, பழையாறை, முதலாம் குலோத்துங்கச் சோழன், ராஜமுந்திரி, வரலாறு | Tagged , , , , , , , , , , | 2 Comments

கப்பலில் யானைப்படை

கப்பலில் யானைகளைக் கொண்டு போவது பற்றி Game of Thronesல் வந்தது நேரக்கோடு வரைக்கும் வந்துவிட்டது. அதுபற்றி என்னுடைய சில கருத்துகள். கப்பலில் யானையை மட்டுமல்ல எந்த விலங்கையும் பறவையையும் கொண்டு போவது எளிதல்ல. கப்பலிலேயே இருக்கும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் பைத்தியம் பிடித்துவிடும்.

குளிர்ப்பதன வசதியற்ற அந்நாளில் உணவுக்காக கொண்டு செல்லும் விலங்குகளும் பறவைகளும் குறைவாகவே இருக்கும். உப்பிலிட்ட இறைச்சியும் கடலுணவுமே அப்போது பயனிலிருந்தவை. மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் கடற்குமட்டலுண்டு. யானை போன்ற விலங்குகளைப் பற்றி சொல்லவும் வேண்டுமா?!

Noah's_Arkநோவா கப்பலில் எல்லா விலங்குகளையும் பறவைகளையும் பலநாட்கள் வைத்திருந்தார் என்று புனிதநூலில் படிக்கும் போது அது கடவுளின் கருணையால் நடந்தது என்று உணர்ச்சிவசப்படலாம். ஆனால் அறிவியலில் பார்வையில் அது அந்தக் காலத்தில் நடந்திருக்க வாய்ப்பில்லை.

அப்படியானால் அந்நாளில் விலங்குகளை கப்பலில் கொண்டு செல்லவே முடியாதிருந்ததா? இல்லை. கொண்டு செல்ல முடிந்திருந்தது. ஆனால் அதற்கு பல நாள் தொலைவு என்று பல கட்டுப்பாடுகள் இருந்தன. சிங்கள மன்னர்கள் பாண்டிய உறவினர்களுக்கு யானைக்கன்றுபடை அனுப்பினர், அரேபியர்கள் குதிரை விற்க வந்தனர்

விலங்குகளை கப்பலில் கொண்டு செல்லும் போது மயக்க மருந்து போன்ற ஒன்று கொடுக்கப்படும். அதிலும் மதம் பிடிக்கக்கூடிய யானைகளை அந்த மருந்து கொடுக்காமல் கொண்டு செல்ல முடியாது. அந்த மருந்தின் கட்டுப்பாட்டிலேயே நீண்ட நாட்களும் வைத்திருக்க முடியாது.

கலங்களை நிறுத்தி விலங்குகளை தரையில் இறக்கி ஓடவிட்டு நடக்கவிட்டு நிதானத்துக்கு வந்தபிறகுதான் மறுபடியும் கலத்தில் ஏற்றி பயணத்தைத் தொடங்க முடியும். அப்படிச் செய்யாமல் விட்டுவிட்டால் கலத்தில் விலங்குகளுக்கு பைத்தியம் பிடித்தால் உண்டாகும் விளைவுகள் மோசமாக இருக்கும்.

இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு யானை கொண்டு வருவதெல்லாம் மிகச்சிறிய பயணம். Game of Thronesல் செர்சி கேட்பதெல்லாம் அதிக தொலைவிலிருந்து பெரும் யானைப்படை. அப்படிக் கொண்டு வர நெடுங்காலம் பிடிக்கும். நெருக்கடியான போர்க்காலங்களில் பெரிய யானைப்படையை கொண்டு செல்ல வாய்ப்பேயில்லை.

சரி. சோழர்களுக்கு வருவோம். யானைகள் கலங்களில் கொண்டு செல்லப்பட்டனவா என்பது பேசுபொருள். இராசராசன் கடல் கடந்து படையெடுத்தது இலங்கை மற்றும் மாலத்தீவு. அது தவிர நிலத்தால் இணைக்கப்பட்டிருந்த பகுதிகளே. நெடுந்தொலைவு கடலில் செல்லவேண்டியிருக்கவில்லை.

Rajendra_Chola_in_Battle,_Kolaramma_Temple_-_Editedகடாரம் கொண்டான் என்றழைக்கப்படும் இராசேந்திர சோழனின் கிழக்காசியப் படையெடுப்புதான் சோழர்களின் மிகப்பெரிய கடற்படையெடுப்பு. இதில்தான் யானைகள் நீண்ட தொலைவு கொண்டு செல்லப்பட்டன. இந்தப் படையெடுப்பு நாட்களில் நடந்து முடிந்துவிட்டது என்கிறார்கள். மிகப்பெரிய சாதனை.

இராசேந்திரனின் படையெடுப்பில் மயக்கமருந்து வழியில் நிறுத்தி யானைகளை நிலத்தில் நடக்கவிட்டு சுதாரிக்கச் செய்தது எல்லாம் நடந்தது. சரி. யானைகளைக் கொண்டு சென்றார்களா? இந்தக் கேள்விக்கு விடை சொல்ல சோழர்களின் கலங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

தரணி என்ற கலம் நீண்ட நாட்கள் கடலில் இருந்து தாக்குப்பிடிக்கக் கூடியது. தரணி கலம் தனித்து இயங்காது. ஒரு தொகுப்பாக இயங்கும். நீண்ட நாட்கள் கடலில் தாக்குப்பிடிக்கத் தேவையான வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இதில் யானைகளை கொண்டு செல்ல முடியாது.

லோலா மற்றும் வஜரா ஆகிய கலங்கள் விரைவுத் தாக்குதலுக்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டவை. விரைவாகப் பயணிக்க ஏற்ற வகையிலான எடையும் அமைப்புமாக இருக்கும். வஜரா சிதைந்த கலங்களுக்கு உதவுவதற்காகவும் பயன்பட்டது. இதிலும் யானைகளை ஏற்ற வாய்ப்பில்லை.

திரிசடை – இதுதான் சோழர்களின் கலங்களிலேயே மிகப் பெரியதும் எடை தாங்கக்கூடியதுமாகும். பெயருக்கு ஏற்றவாறு மூன்று மூன்று கலங்களாக இணைந்து பயணிக்கும். போரிடும். ஒவ்வொரு திரிசடை கலனிலும் உச்சமாக நானூறு படைவீரர்கள் செல்ல முடியும். படை வீரர்கள் செல்வதற்கு திரிசடை தேவை.

யானைகளை கொண்டு செல்வதற்கு திரிசடைதான் பயன்படுத்தப்பட்டது. இரேசேந்திரனின் கிழக்காசியப் படையெடுப்பு மிகுந்த திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது. பத்துநாள் முன்பின் தொடங்கியிருந்தாலும் பெருவெற்றி கிட்டாமலோ வெற்றியே கிட்டாமலோ போயிருக்கலாம்.

கடற்காற்று நாட்கள் என்ற அளவில் திட்டம் தீட்டப்பட்ட போரில் விரைந்து செயலாற்றுவதே பெருந்தேவை. அதையும் மேற்சொன்ன கல அளவுகளை வைத்து ஒரு கலத்தில் எத்தனை யானைகள் கொண்டு செல்லப்பட்டிருக்கக்கூடும் என்ற கணக்கை அவரவர் மனக்கணக்காகப் போட்டுக் கொள்ளுங்கள்.

Battle_of_kedahஇராசேந்திரனின் கடாரப்போர் பற்றி தேடிப்படியுங்கள். கடற்போர் செல்லும் எண்ணமில்லாமல் இருந்த இராசேந்திரனை எது போரெடுக்கத் தூண்டியது என்றும் எப்படி போர் நடத்தப்பட்டது என்றும் அந்தப் போரின் விளைவுகள் என்னவென்றும் வியப்பான தகவல்கள் தெரிந்து கொள்ளலாம்.

மொழியையும் வரலாற்றையும் தரவுகளோடு நேர்மையாக அணுக வேண்டும். அப்போதுதான் நடந்த நிகழ்வுகளில் நாம் எதை சிறப்பாகப் பார்க்க வேண்டும் தவறாகப் பார்க்க வேண்டும் என்ற தெளிவு இருக்கும். நான் தெரிந்தவைகளை இந்தத் திரியில் கொடுத்துள்ளேன். தவறுகள் இருப்பின் சுட்டவும். தெரிந்து கொள்கிறேன்.

பி.கு

நண்பர் T.S.Krishnan கடாரப் போரில் யானைகள் கொண்டு செல்லப்படதற்கு எந்தத் தரவுகளும் இல்லை என்கிறார். கடாரப் போர் என்பது 15நாட்களில் விரைவாக நடத்தி முடிக்கப் பட்ட அதிரடித் தாக்குதல் என்பதில் நானும் அவரும் ஒத்த கருத்தில் இருக்கிறோம். அதற்காக பெரும்பாலும் லோலா மற்றும் வஜரா போன்ற விரைந்து செல்லும் கலங்களே பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதிலும் ஒத்த கருத்தில் இருக்கிறோம். திரிசடை பயன்படுத்தப்படதா என்பதற்கு தரவு இல்லை என்பதும் உண்மைதான். அதனால் யானைகளை கடாரப் போரில் பயன்படுத்தவில்லை என்கிறார். அவருடைய கருத்தையும் இந்தப் பதிவில் பதிவு செய்கிறேன். நூறு யானைகளாவது கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்று கருதினேன். ஆனால் அவர் சொன்னதை மறுதலித்து யானைகள் கடாரப் போரில் பயன்படுத்தப்படன என எதிர்வினையாற்ற என்னிடம் தரவுகள் இல்லை.

அன்புடன்,
ஜிரா

Posted in இராசராசச் சோழன், இராசேந்திரச் சோழன், வரலாறு | Tagged , , , , , , | 1 Comment

சடங்குகள்

சடங்குகள் என்பவை மனிதர்கள் வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை பிரிக்க முடியாத பகுதி. பிறந்த குழந்தையை குளிப்பாட்டுவது, சேய்நெய் வைப்பது, தொட்டில் இடுவது, வசம்பு கட்டுவது என்று தொடங்கி, வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் சடங்குகள் உண்டு.

சடங்குகள் தோன்றத் தொடங்கிய பொழுது மிக எளிமையாகவே இருந்திருக்க வேண்டும். சற்று ஆழந்து நோக்கினால், நீராட்டுவது என்பது எல்லாச் சடங்குகளுக்கும் அடிப்படைச் சடங்காக இருந்திருக்குமோ என்றும் கூட தோன்றுகிறது. பிறப்பு, வயதுக்கு வந்த சடங்குகள், மஞ்சள் நீர் ஊற்றுவது, இறப்பு என்று எத்தனை.

கல்லெடுத்து சிலை வடிக்கையில் நீர்ப்படை என்றும் இறந்தவர்களை எரித்ததும்/புதைத்ததும் பாற்படை என்றும் இருக்கக் காண்கிறோம். இயற்கையிலிருந்து விலகி மெய்யியலுக்குள் நுழைந்த பொழுது மனிதர்களுக்கு ஆனதை கடவுளுக்கும் ஆக்கிவைத்தார்கள்.

எளிய மக்களின் சடங்குகளாகத் தொடங்கியவை மதங்களின் சடங்குகளாக உள்ளிழுக்கப்பட்டு இன்றும் அப்படியே அடையாளப்படுத்தப்படுகின்றன. உலகெங்கிலும் எல்லா மதங்களிலும் இதுதான் நிலை. ஒரு குறிப்பிட்ட மதச்சடங்கு அந்த மதம் தொடங்கிய நிலப்பரப்பின் மக்களின் வாழ்வியல் சடங்காக இருந்திருக்கும்.

அதே போல் மாலை போடுவதும் எளிமையாகத் தொடங்கியதே. கலப்பை, வேல்கம்பு, அடுப்பு, பாத்திரம் என்று தத்தமது கருவிகளுக்கு தூய்மைப் படுத்துவதும், அழகு படுத்துவதும், மலர் சூட்டுவதும் தொடக்க நிலை சடங்காக இருந்திருக்கக் கூடும். அது மனிதர் நடுகல் சிலை என்று பரிணமித்திருக்கக் கூடும்.

யார் கண்டார், இன்னும் கொஞ்ச நாளில் மாலை போடுவது என்பது “இந்த” மதத்தின் சடங்கு என்று கூட யாரேனும் சொல்லி சிரிப்பு மூட்டக்கூடும். எங்கள் ஊரில் பாட்டிகள் காலத்தில் வீட்டில் தினமும் காலையில் விறகடுப்புகள் சாம்பல் நீக்கப்பட்டு தூய்மையாக்கப்பட்டு கோலம் போட்டு நான் கண்டிருக்கிறேன்.

இப்படி அனைத்திலும் சடங்காகவே வாழ்ந்து பழகிய மனிதனிடமிருந்து சடங்குகளைப் பிரிப்பது என்பது ஆகாத வேலை. இதை மதங்களைப் போலப் புரிந்து கொண்டவர்களும் பயன்படுத்திக் கொள்கிறவர்களும் யாருமில்லை. சடங்குகள் என்பது வாழ்க்கையில் தேவையென்றே தோன்றுகின்றது.

சடங்குகள் என்பது எதோ கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமானது என்று நான் நம்பவில்லை. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் எதோவொரு வகையில் சடங்குகளைப் பின்பற்றுவதிலிருந்து சடங்குகளின் தொன்மையை மிக அழகாக என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

சடங்குகளை மனிதர்களிடமிருந்து பிரிக்க முடியாது என்றான பிறகு சடங்குகளை எப்படி மேம்படுத்துவது செம்மைப்படுத்துவது என்பதே அறிவுடையோர் எண்ணமாகவும் செயலாகவும் இருக்க வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த வாழ்வியல் சடங்குகளும் வழிபாட்டுச் சடங்குகளும் தமிழ்ப்படுத்தப்பட வேண்டும்.

தமிழில் சடங்குகள் வேண்டாம், வேற்று மொழியில் தான் சடங்குகள் வேண்டும் என்று நினைப்பவர்கள் அவரவர் விருப்பத்துக்கு செய்து கொள்ளுங்கள். ஆனால் வாழ்வியல் வழிபாட்டுச் சடங்குகள் தமிழில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் கருத்தை முதலில் மதித்து ஏற்றுக்கொள்ளுங்கள்.

தமிழில் மந்திரங்கள் சொல்லி திருமணம் குடமுழுக்கு புதுமனைபுகுவிழா என்று ஒவ்வொன்றையும் தமிழில் செய்வதற்கு ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். குறிப்பாக பயிற்சி பெறுகின்றவர்களிடம் சாதி வேறுபாடு பார்க்கக் கூடாது. முறையாக பயிற்சி பெற்றவரா என்ற தகுதியே பெரிது.

வீட்டுச் சடங்குகளில் தொடங்கி கோயில்களின் வழிபாட்டுச் சடங்கிலும் இந்த முறை கொண்டுவரப்பட வேண்டும். இந்தச் முறை தமிழகத்தில் தமிழை முன்னிறுத்துவது மட்டுமன்றி சாதிய வேறுபாடுகளையும் உயர்வு தாழ்வுகளையும் களையும் என்றே நான் நம்புகிறேன்.

இந்தச் சீர்திருத்தத்தை ஆதரிப்பவர்கள் ஏற்பவர்கள் முன்னெடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஆதரிக்க விரும்புகிறேன். மாறானவர்களை கொள்கையளவில் நான் மறுதலிக்கிறேன். ஏற்கனவே தமிழ் மந்திரங்கள் சொல்லி நடந்த திருமணங்கள் கண்டிருக்கிறேன். அது பெருக வேண்டும். பரவ வேண்டும்.

இந்தச் சீர்திருத்தங்களை முன்னெடுத்துவிட்டு சாதீய உயர்வுதாழ்வுகளை நீக்குகின்றவர்கள் மட்டும் “மதத்தவர்களே ஒன்றுபடுங்கள்” என்று கூவினால் தான் அதில் சிறிது அடிப்படை நேர்மையாவது இருக்கும். இதுதான் என் எண்ணவோட்டம்.

என் வாழ்நாளில் இது நடக்குமென்று தோன்றவில்லை. இதை யாரேனும் முன்னெடுத்து பரப்பி வருங்காலத்திலாவது நடைமுறைப் படுத்தினால் தமிழுள்ளளவும் புகழ் வாழ்பவர் ஆவர் என்று நான் வணங்கும் முருகக் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். எதிர்ப்பவர்க்கு நான் சொல்ல ஏதுமில்லை. கந்தனே பதில்.

அன்புடன்,
ஜிரா

Posted in எண்ணங்கள், சமூகம் | Tagged , | 1 Comment

ஆண்டவனே கொஞ்சம் அறிவைக் கொடு

ஒரு நிகழ்ச்சில வீணையிசையா கேட்டதிலிருந்து இந்தத் திருப்புகழ் மேல ஆர்வம். ரெண்டே வரிதான். ஒவ்வொரு வரியும் எட்டு சீர். லேசா நினைவுல வெச்சுக்க வசதியானது.

கருவூர்னு சொல்லப்படுற கரூர் திருப்புகழ். கரூர் சேரநாடா சோழநாடான்னு பலருக்கு குழப்பம். சேரநாட்டின் வட எல்லைதான் வஞ்சி(கரூர்). அப்பப்போ சோழன் வந்து சண்டை போட்டு பிடிச்சு வெச்சுக்குவான். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு நாட்டோட இருந்திருக்கு கரூர். இத்தனைக்கும் கரூரை சேர சோழ பாண்டிய நாட்டின் முக்கூடல்னு சொல்லலாம். ஊர் அமைஞ்சிருக்கும் எடம் அப்படி. அதுனாலதானோ என்னவோ கரூருக்கு வஞ்சி முற்றம்னு இலக்கியங்கள் பேர் சொல்லுது. ஆன்பொருநை ஆற்றக்கரையில் இருக்கும் ஊர். பின்னாளில் அமராவதின்னு மாத்தப்பட்டிருக்கு. பொருநைன்னு பேர் இருந்த ஆறுகளுக்கு மட்டும் பெயர் மாத்தியிருக்குறது ஏன்னு யோசிக்கிறேன். தெரியல. பொருநை -> தாமிரபரணி. ஆன்பொருநை -> அமராவதி.

கரூரை சேர நாட்டோட பழைய தலைநகரம்னு நிறைய பேர் சொல்றாங்க. அதுல எனக்கு உடன்பாடில்ல. மூன்று நாடுகளும் முக்கூடும் எடத்துல தலைநகரத்தை வைக்கிற அளவுக்கு சேரர்கள் இருந்திருக்க மாட்டாங்க. வஞ்சின்னு இன்னொரு ஊரும் உண்டு. இன்னைக்கு அதை கொடுங்காளூர்னு சொல்றாங்க. அதுதான் சேரனுடைய தலைநகரம் வஞ்சி. இந்த வஞ்சியைப் பத்தி இன்னொரு பொழுது பாக்கலாம். இப்ப கரூர் வஞ்சிக்கு வருவோம்.

Karur - 1கரூர் மக்களுக்கு தாந்தோனி மலை நல்லாத் தெரிஞ்சிருக்கும். தான் தோன்றி மலைன்னு பெயர்க்காரணம் வேற சொல்வாங்க. ஆனா அது தப்புன்னு எத்தனை பேருக்குத் தெரியும்? சங்க இலக்கியம் படிச்சா பல ஊர்களுக்குப் பின்னால் இருக்கும் பெயர் வரலாறு புரியும். தாமான் தோன்றி அந்த ஊரோட பேர். தாவுகின்ற மான் தோன்றும் ஊர். அங்க இருக்கும் மலை தாமான் தோன்றி மலை. அந்த ஊரை ஆண்ட சேரர் வழிச் சிற்றரசன் தாமான் தோன்றிக்கோன். தானாய்த் தோன்றிய மலைன்னு சொன்னா கேக்கும் போது அப்படியே புல்லரிக்கும். ஆனா எல்லா மலைகளுமே தானாய்த் தோன்றியதுதான்னு நாம யாரும் யோசிக்க மாட்டோம்.

Pasupatheeswarar-Temple-(17)_original_watermarkகரூர்ல சின்ன வயசுல இருந்திருக்கேன். பசுபதீசுவர் கோயில் வீட்டிலிருந்து நடக்குற தூரம். அந்தக் கோயில்ல நுழைஞ்சதும் உள்ள இருக்கும் மண் தரை ரொம்பப் பிடிக்கும். இப்பல்லாம் கல் பாவியிருக்காங்கன்னு கேள்விப்பட்டேன். அந்தக் கோயில் முருகன் மேல அருணகிரிநாதர் பாடியதுதான் இந்தத் திருப்புகழ்.

சே… நமக்கு இன்னும் கொஞ்சம் அறிவிருந்தா எங்கயோ போயிருக்கலாம். இப்படி நாம எல்லாருமே எதோவொரு வேளையில நெனைச்சிருப்போம். இப்பவும் கூட நெனச்சுக்கிட்டிருப்போம். அருணகிரிநாதரும் நெனச்சிருக்காரு போல. அதான் எடுத்த எடுப்புலயே “மதியால் வித்தகனாகி”ன்னு தன்னோட விருப்பத்தைச் சொல்றாரு.

ஆனா பாருங்க, அடுத்து “மனதால் உத்தமனாகி”ன்னு கேக்குறாரு. இத நாம யாரும் பொதுவா விரும்ப மாட்டோம். ஏன் தெரியுமா? நாமள்ளாம் நம்மையே உத்தமர்கள்னு நம்புற அளவுக்கு சுயபோதை உள்ளவங்க. சுயமோகர்னும் சொல்லிக்கலாம். வேற யாரோட பேரோ நினைவுக்கு வந்தா நான் பொறுப்பில்லை. இப்படி ஏற்கனவே உத்தமரா இருக்குற நாம ஏன் உத்தமனாகனும்னு கேக்கப் போறோம். ஆனா முருகக் கடவுளே வந்து பாடம் சொன்ன அருணகிரிநாதர் மனதால் உத்தமனாகனும்னு கேக்குறாரு.

இந்த வரிசைல ஒரு மறை பொருள் இருக்கு. மொதல்ல அறிவு வேணும். அறிவிருந்தா எதையும் கழட்டி மாட்டலாம். வேண்டியபடி செய்யலாம். ஆனா அறிவு நல்லதையும் அறியும். கெட்டதையும் அறியும். அப்படி அறிஞ்ச வித்தகன் நல்லது சொல்ற வழியில் போகனும்னா அவன் உத்தமனாகவும் இருக்கனும். இல்லாட்டி படிச்சவன் செய்ற தப்புதான் பெரிய தப்பாயிருக்கும். அறிவில்லாதவன் நல்லதும் செய்ய மாட்டான். கெட்டதும் செய்யமாட்டான். படிச்சவனைப் பாத்துதான் பயப்பட வேண்டியிருக்கு.

சரி. வித்தகனாயாச்சு. உத்தமனாயாச்சு. அடுத்து?

மனதில் சிவஞானம் பதிவாக வேண்டும். அப்ப வைணவர்களுக்கு? யாராக இருந்தாலும் இறைவனைச் சிந்திக்கிற எண்ணம் மனதில் பதிவாக வேண்டும். அப்படிப் பதிஞ்சாதான் பரயோகம் கிடைக்குமாம். பரயோகம்னா என்னன்னு புரியலைன்னா ஜென்நிலைன்னு வெச்சுக்கோங்க. ஜென்நிலை வேணும்னு கேக்குறாரு அருணகிரி.

முதல்ல வித்தகனாகி, பிறகு உத்தமனாகி, மனதில் இறைச்சிந்தனை பதிவாகி, ஜென்நிலையைக் கொடு!

இதுதான் முதல் வரி.

மதியால் வித்தகனாகி மனதால் உத்தமனாகி பதிவாகிச் சிவஞான பரயோகத் தருள்வாயே!

அப்போ ரெண்டாவது வரி?

யார் கிட்ட இந்த வரத்தைக் கேக்குறாருங்குறதுதான் ரெண்டாவது வரி.

நிதியே நித்தியமே என் நினைவே நற்பொருளாயோய் கதியே சொற்பரவேளே

என் செல்வமே! என்றைக்கும் நிலைத்திருக்கும் பொருளே! என் நினைவே! சிறந்ததில் எல்லாம் சிறந்த பெரும்பொருளே! என்னுடைய புகலிடமே! ஊர் புகழும் தலைவனே!

கருவூரிற் பெருமாளேகருவூரில் இருக்கும் முருகப் பெருமாளே!

அவ்வளவுதான் பொருள். இந்தத் திருப்புகழை நீங்க திரும்பத் திரும்ப படிக்கும் போது அதுக்குள்ள இன்னும் பல பொருள் படிமங்களாக உங்க அறிவுநிலைக்கு ஏத்த மாதிரி புரியலாம். ஆனா அடிப்படைப் பொருள் இதுதான்.

Murugan WOP 1ஆண்டவா! அறிவைக் கொடு. அந்த அறிவை வைத்து தவறு செய்யாமல் நல்லது மட்டும் செய்யும் உத்தமனாக்கு. உத்தமமான உள்ளத்தில் உன் நினைவைக் கொடு. அந்த நினைவினால் மேலான யோகநிலையில் என்னை நிலை நிறுத்து. ஆண்டவா! என் செல்வமும் நீ! என்றும் நிலைத்திருக்கும் அருளும் பொருளும் நீ! என் நினைவும் நீ! பேரின்பப் பொருளும் நீ! எனக்கு கதியும் நீ! உலகம் போற்றும் பெரும்பொருளும் நீ!

அருணகிரிநாதர் முருகனேன்னு போட்டிருக்காரு. நீங்க உங்களுக்குப் பிடிச்ச பேரைப் போட்டுக்கலாம்.

மதியால் வித்தகனாகி மனதால் உத்தமனாகி
           பதிவாகிச் சிவஞான பரயோகத் தருள்வாயே
நிதியே நித்தியமே என் நினைவே நற்பொருளாயோய்
           கதியே சொற்பரவேளே கருவூரிற் பெருமாளே

இந்தத் திருப்புகழை ஓதுவார் பா.சற்குருநாதன் அவர்கள் குரலில் கேட்க.

இந்தப் பாடலை கர்நாடக இசைப்பாடகர்களும் பாடியிருக்கிறார்கள். ஆனால் உத்தமனாகி என்பதை உதமனாகி என்று ஓடுகிறார்கள். ஓதுவார் பா.சற்குருநாதன் பாடியது சிறப்பாக இருக்கிறது. இவர் பாடி வலையேற்றியிருக்கும் மற்ற பதிகங்களும் அருமை.

அன்புடன்,
ஜிரா

Posted in அருணகிரிநாதர், இறை, இலக்கியம், கரூர், தமிழ், தாந்தோன்றிமலை, திருப்புகழ், முருகன் | Tagged , , , , , , , , , , | Leave a comment

04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி)

முந்தைய பதிவை இந்தச் சுட்டியில் படிக்கலாம்.

DbsLhGvVQAA5_as1970களில் குழந்தைப் பாடகியாகவே அடையாளம் காணப்பட்டார் எம்.எஸ்.ராஜேஸ்வரி. திக்குத் தெரியாத காட்டில் படப் பாட்டு அதை மேலும் உறுதி செய்தது. பாடகி புஷ்பலதாவை குழந்தைப் பாடகியாக எம்.எஸ்.வி ராஜபார்ட் ரங்கதுரையில் அறிமுகப்படுத்திய பிறகும் சில நல்ல குழந்தைப்பாடல்கள் இவர் குரலில் கிடைத்தன

ஒரு குடும்பம் காட்டுக்குப் போகிறது. அங்கு அவர்கள் செல்லமகள் தொலைந்து போகிறாள். அதே காட்டுக்குள் சிறையில் இருந்து தப்பித்த கைதிகள். அவர்களைப் பிடிக்க காவல்காரர்கள். காட்டுக்குள் விளையாட்டுத்தனமாய் வந்த இளைஞர் கூட்டம். காட்டு விலங்குகள். இதை வைத்து எடுக்கப்பட்ட படம் திக்குத் தெரியாத காட்டில். இந்தப் படத்தில் வாலி எழுதிய “பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா” பாடலை மெல்லிசை மன்னர் இசையில் பாடினார் எம்.எஸ்.ராஜேஸ்வரி.

நான் ஏன் பிறந்தேன் படத்தில் சங்கர் கணேஷ் இசையில் அவினாசி மணி எழுதிய “தம்பிக்கு ஒரு பாட்டு, அன்புத் தங்கைக்கு ஒரு பாட்டு” என்ற பாடலை பேபி இந்திராவுக்காக எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடினார். இந்தப் பாடலில் மற்றொரு குழந்தைக்காக எல்.ஆர்.அஞ்சலி பாடினார்.

மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி இசையில் பாடுவதற்கும் எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு ஒரு வாய்ப்பு வந்தது. ஆனால் அதுவும் குழந்தைப் பாடலே. டி.ஆர்.ராமண்ணா இயக்கிய சக்திலீலை திரைப்படத்தில் “தன்னை வென்றவன் எவனும் உன்னை வெல்லலாம்” என்ற பாடலைப் பாடினார். பாட்டுக்கு நடித்த சிறுவனின் பெயர் தெரியவில்லை.

Nayakan_1987_posterபாடகர்களுக்கு வாய்ப்பு வருவதும் குறைவதும் விதியின் வழி என்றுதான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக நடிகர் கமலகாசனுக்கு களத்தூர் கண்ணம்மாவில் முதன்முதலில் பாடிய எம்.எஸ்.ராஜேஸ்வரி, மீண்டும் கமலகாசன் படத்தில் பாடுவதற்கு 27 ஆண்டுகள் பிடித்தன.

இசைஞானி இளையராஜாவின் 400வது படம் என்ற பெருமையோடு வெளிவந்த படம் நாயகன். அந்தப் படத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகம் தான் மறந்த பாடகியின் குரலை மீண்டும் கேட்டது. புலவர் புலமைப்பித்தன் எழுதிய “நான் சிரித்தால் தீபாவளி” என்ற பாடலே அது. அந்தப் பாடலை ஜமுனாராணியோடு சேர்ந்து பாடினார். பாடல் நடக்கும் காலகட்டத்தைக் குறிக்க இளையராஜா எம்.எஸ்.ராஜேஸ்வரியையும் ஜமுனாராணியையும் பாடவைத்திருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏவிஎம்மின் பாட்டி சொல்லைத் தட்டாதே படத்தில் கார் கார் சூப்பர் கார் பாடலை அவர் சந்திரபோஸ் இசையில் பாடியிருந்தாலும், படத்தில் அந்தப் பாட்டின் சிறுபகுதி மட்டுமே வந்தது. அதேபோல் சந்திரபோஸ் இசையில் ”என்ன கத சொல்லச் சொன்னா” பாட்டை ஏவிஎம் நிறுவனம் தயாரித்த தாய் மேல் ஆணை படத்துக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் ஏசுதாசோடு பாடினார். இந்தப் பாட்டில் எம்.எஸ்.ராஜேஸ்வரியின் குரலுக்கு மாஸ்டர் மீனுராஜ் வாயசைத்து நடித்தார்.

கிட்டத்தட்ட தமிழகம் மறந்து போன குரலை 1990ல் முற்றிலும் எதிர்பார்த்திருக்காத ஒரு பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலிக்க வைத்தது. பாடல் + படத்தின் வெற்றி எம்.எஸ்.ராஜேஸ்வரியின் குரலை மற்ற மொழிகளுக்கும் கொண்டு சென்றது. அந்தப் பாடல்…

அஞ்சலி படத்தில் பிரபலமான பேமி ஷாமிலிதான் துர்கா படத்தின் பெரிய மூலதனம். அதோடு குரங்கையும் நாயையும் வைத்து குறைந்த பட்ஜெட்டில் படமெடுத்து பெருவெற்றி கண்டார் இராம.நாராயணன். அந்தப் படத்தில் பேபி ஷாமிலிக்காக எல்லாப் பாடல்களையும் பாடினார் எம்.எஸ்.ராஜேஸ்வரி. அதிலும் குறிப்பாக வாலி எழுதிய “பாப்பா பாடும் பாட்டு” என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.

துர்கா படப் பாடலின் வெற்றியால் பேபி ஷாமிலியை வைத்து பல படங்கள் எடுத்தார் இராம.நாராயணன். அந்தப் படங்களில் எல்லாம் எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடுவது என்பது வழக்கமாகிப் போனது. செந்தூரதேவி திரைப்படத்தில் இடம் பெற்ற “யக்கா யக்கா யக்கா யக்கா ஏலக்கா” பாட்டும் அப்படியே. படத்தை மக்கள் மறந்துவிட்டாலும் ஏலக்கா பாட்டு ஏலக்காய் மணம் போல இன்றும் இருக்கிறது.

மூன்று வயது பேபி ஷாமிலிக்கு குழந்தைக் குரலில் எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடும் போது அவருக்கு வயது 61. ஆனாலும் அவரது குரல் இளமையோடும் பொருத்தமாகவும் இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. இராம.நாராயணனின் தைப்பூசம் திரைப்படத்தில் வந்த “அண்ணே அண்ணே அன்பு அண்ணே நாகராஜண்ணே” பாட்டும் அப்படிப்பட்டதுதான். இந்தப் பாடல்கள் மற்ற மொழியிலும் வெளியானது எம்.எஸ்.ராஜேஸ்வரியின் குரலை பக்கத்து மாநிலங்களுக்கும் எடுத்துச் சென்றது.

என்னதான் குழந்தைப் பாடகியாக அடையாளங் காணப்பட்டாலும், பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய பாடல்கள் அவரை ஒரு சிறந்த பன்முகப் பாடகியாகவே அடையாளம் காட்டுகின்றன. இந்தப் பதிவுகளின் வழியாக நாம் பார்த்தது சில பாடல்களைத்தான். அவர் பாடிய காவியப் பாடல்கள் இருக்கும் வரை தமிழ் பேசும் பொன்னுலகம் அவரை நினைத்துக் கொண்டேயிருக்கும்.

DbsXOOpUwAAUIQY

அன்புடன்,
ஜிரா

Posted in இசைஞானி, இளையராஜா, எம்.எஸ்.ராஜேஸ்வரி, எம்.எஸ்.விசுவநாதன், எஸ்.பி.பாலசுப்ரமணியன், கே.ஜே.ஏசுதாஸ், சங்கர் கணேஷ், சந்திரபோஸ், திரையிசை, மெல்லிசைமன்னர், வாலி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , | 2 Comments

03. பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்

முந்தைய பதிவை இந்தச் சுட்டியில் படிக்கலாம்.

1950களின் பிற்பகுதியில் தமிழ்த் திரையிசையில் மெல்லிசை அலை தொடங்கி ஆக்கிரமித்த காலகட்டம். டி.எம்.எஸ், பி.சுசீலா போன்றவர்கள் மிக வேகமாக முன்னணிக்கு வந்த காலகட்டம். எந்தக் காலத்திலும் முன்னணி இசையமைப்பாளர் பாட வைக்கும் கலைஞர்களுக்கே புகழும் மற்றவர்களிடமும் பாடும் வாய்ப்பும் கிடைக்கும் என்பதே உண்மை. அந்த வகையில் எம்.எஸ்.வி தனது ஆஸ்தான பாடகர்களாக டி.எம்.எஸ், பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி என்று மாறிவிட்ட போது கேவி.மகாதேவனும் அதே வழியில் செல்ல நேர்ந்தது.

DbsCs5bVMAAWaSVஆர்.சுதர்சனம் வாய்ப்புகள் குறைந்ததும், ஜி.ராமநாதன் மறைவு, எஸ்.வி.வெங்கட்ராமன் போன்ற இசையமைப்பாளர்களின் பின்னடைவும் தவிர்க்க முடியாத சூழலில், எம்.எஸ்.ராஜேஸ்வரின் வாழ்க்கையில் விளக்கேற்றிய ஏவிஎம் வழியாக இன்னொரு புதிய பாதை திறந்தது. ஒருவகையில் அது முருகன் காட்டிய பாதை. அதுதான் களத்தூர் கண்ணம்மா.

பதிபக்தியிலேயே மெல்லிசை மன்னர்களோடு பீம்சிங் இணைந்துவிட்டாலும் ஏவிஎம் தயாரித்த களத்தூர் கண்ணம்மா படத்துக்கு ஆர்.சுதர்சனம் இசை. அந்தப் படத்தில் நடிகர் கமலஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தாய் தந்தையைப் பிரிந்த குழந்தைச் சிறுவன் அனாதை இல்லத்தில் “அம்மாவும் நீயே அப்பாவும் நீயே” என்று முருகக் கடவுளைப் பார்த்துப் பாடும் பாடல் எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு கிடைத்தது. பாட்டைப் பார்த்தால் குழந்தைக் கமல் பாடுகிறாரா எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடுகிறாரா என்று நமக்கே ஐயம் வந்துவிடும். அப்படியொரு பொருத்தம்.

படத்தின் வெற்றியும் பாடலின் வெற்றியும் எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு குழந்தைகளுக்குப் பிள்ளைத் தமிழ் பாடும் பாடகியாக புதியதொரு பாதையைக் கொடுத்தது என்பதே உண்மை. அதே வகையில் அந்த ஆண்டே கே.வி.மகாதேவனும் எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு ஒரு குழந்தைப் பாடலைக் கொடுத்தார். கைதி கண்ணாயிரம் திரைப்படத்தில் மருதகாசி எழுதிய “சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்” என்ற பாட்டு அது. சிறுவனாக நடித்த பேபி சாவித்திரிக்கு எம்.எஸ்.ராஜேஸ்வரியின் குரல் அழகாகப் பொருந்திப் போனது.

குழந்தைப் பாடலாக இல்லாவிட்டாலும் சற்றே குழந்தைக் குரல்தனமான பாடலொன்றை எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு குமுதம் படத்தில் கொடுத்தார் கே.வி.மகாதேவன். மருதகாசி எழுதிய மியாவ் மியாவ் பூனைக்குட்டி என்ற பாட்டுதான் அது.

DbsJfqWUwAAI0Ntகுழந்தைப் பாடல்களைப் பாடத் தொடங்கினாலும் மற்ற பாடல்களும் தொடர்ந்து கிடைத்தது. 1965ல் மெல்லிசை மன்னர் கொடுத்த பாடல் ஒன்று எம்.எஸ்.ராஜேஸ்வரியை நிரந்த குழந்தைப் பாடகியாகவே மாற்றிவிட்டது என்றால் மிகையில்லை. படம் + பாடலின் வெற்றி அந்த வகை. இன்னும் சொல்லப் போனால் அதே படத்தில் பி.சுசீலாவும் ஒரு குழந்தைப் பாட்டு பாடினார். ஆனாலும் எம்.எஸ்.ராஜேஸ்வரி குழந்தைப் பாடகி முத்திரை தொடர்ந்தது.

ஏவிஎம் தயாரித்த குழந்தையும் தெய்வமும் திரைப்படத்தில் “கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டி கூட்டிலே” என்று குட்டி பத்மினிக்காக எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய கண்ணதாசன் பாடலே அது.

அடுத்த ஆண்டும் (1966) மெல்லிசை மன்னர் மற்றொரு குழந்தைப் பாடலைக் கொடுத்தார். அதுவும் எம்.எஸ்.ராஜேஸ்வரியை முதன்முதலில் ஏவிஎம்மில் அறிமுகப்படுத்திய குடும்ப நண்பரான பி.ஆர்.பந்துலு இயக்கிய எங்க பாப்பா திரைப்படத்தில். கண்ணதாசன் எழுதிய அந்தப் பாடலை டி.எம்.சௌந்தரராஜனோடு சேர்ந்து பேபி ஷகீலாவுக்காக அழகாகப் பாடினார் எம்.எஸ்.ராஜேஸ்வரி.

அதே ஆண்டில் இசையமைப்பாளர் வேதாவும் மார்டன் தியேட்டர்சின் இரு வல்லவர்கள் திரைப்படத்தில் ஒரு குழந்தைப் பாட்டு கொடுத்தார். கண்ணதாசன் எழுதிய “குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா” என்ற பாட்டை மீண்டும் பேபி ஷகீலாவுக்காகப் பாடினார் எம்.எஸ்.ராஜேஸ்வரி.

கொஞ்சம் கொஞ்சமாக 1960களின் இறுதியில் குழந்தைப் பாடல்கள் என்றால் எம்.எஸ்.ராஜேஸ்வரி என்பது நிலைத்துவிட்டது.

தொடரும்…

அன்புடன்,
ஜிரா

Posted in ஆர்.சுதர்சனம், எம்.எஸ்.ராஜேஸ்வரி, எம்.எஸ்.விசுவநாதன், கண்ணதாசன், கே.வி.மகாதேவன், டி.எம்.சௌந்தரராஜன், திரைப்படம், திரையிசை, பழைய படங்கள், மருதகாசி, மெல்லிசைமன்னர், வேதா, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , | 4 Comments