கப்பலில் யானைகளைக் கொண்டு போவது பற்றி Game of Thronesல் வந்தது நேரக்கோடு வரைக்கும் வந்துவிட்டது. அதுபற்றி என்னுடைய சில கருத்துகள். கப்பலில் யானையை மட்டுமல்ல எந்த விலங்கையும் பறவையையும் கொண்டு போவது எளிதல்ல. கப்பலிலேயே இருக்கும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் பைத்தியம் பிடித்துவிடும்.
குளிர்ப்பதன வசதியற்ற அந்நாளில் உணவுக்காக கொண்டு செல்லும் விலங்குகளும் பறவைகளும் குறைவாகவே இருக்கும். உப்பிலிட்ட இறைச்சியும் கடலுணவுமே அப்போது பயனிலிருந்தவை. மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் கடற்குமட்டலுண்டு. யானை போன்ற விலங்குகளைப் பற்றி சொல்லவும் வேண்டுமா?!
நோவா கப்பலில் எல்லா விலங்குகளையும் பறவைகளையும் பலநாட்கள் வைத்திருந்தார் என்று புனிதநூலில் படிக்கும் போது அது கடவுளின் கருணையால் நடந்தது என்று உணர்ச்சிவசப்படலாம். ஆனால் அறிவியலில் பார்வையில் அது அந்தக் காலத்தில் நடந்திருக்க வாய்ப்பில்லை.
அப்படியானால் அந்நாளில் விலங்குகளை கப்பலில் கொண்டு செல்லவே முடியாதிருந்ததா? இல்லை. கொண்டு செல்ல முடிந்திருந்தது. ஆனால் அதற்கு பல நாள் தொலைவு என்று பல கட்டுப்பாடுகள் இருந்தன. சிங்கள மன்னர்கள் பாண்டிய உறவினர்களுக்கு யானைக்கன்றுபடை அனுப்பினர், அரேபியர்கள் குதிரை விற்க வந்தனர்
விலங்குகளை கப்பலில் கொண்டு செல்லும் போது மயக்க மருந்து போன்ற ஒன்று கொடுக்கப்படும். அதிலும் மதம் பிடிக்கக்கூடிய யானைகளை அந்த மருந்து கொடுக்காமல் கொண்டு செல்ல முடியாது. அந்த மருந்தின் கட்டுப்பாட்டிலேயே நீண்ட நாட்களும் வைத்திருக்க முடியாது.
கலங்களை நிறுத்தி விலங்குகளை தரையில் இறக்கி ஓடவிட்டு நடக்கவிட்டு நிதானத்துக்கு வந்தபிறகுதான் மறுபடியும் கலத்தில் ஏற்றி பயணத்தைத் தொடங்க முடியும். அப்படிச் செய்யாமல் விட்டுவிட்டால் கலத்தில் விலங்குகளுக்கு பைத்தியம் பிடித்தால் உண்டாகும் விளைவுகள் மோசமாக இருக்கும்.
இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு யானை கொண்டு வருவதெல்லாம் மிகச்சிறிய பயணம். Game of Thronesல் செர்சி கேட்பதெல்லாம் அதிக தொலைவிலிருந்து பெரும் யானைப்படை. அப்படிக் கொண்டு வர நெடுங்காலம் பிடிக்கும். நெருக்கடியான போர்க்காலங்களில் பெரிய யானைப்படையை கொண்டு செல்ல வாய்ப்பேயில்லை.
சரி. சோழர்களுக்கு வருவோம். யானைகள் கலங்களில் கொண்டு செல்லப்பட்டனவா என்பது பேசுபொருள். இராசராசன் கடல் கடந்து படையெடுத்தது இலங்கை மற்றும் மாலத்தீவு. அது தவிர நிலத்தால் இணைக்கப்பட்டிருந்த பகுதிகளே. நெடுந்தொலைவு கடலில் செல்லவேண்டியிருக்கவில்லை.
கடாரம் கொண்டான் என்றழைக்கப்படும் இராசேந்திர சோழனின் கிழக்காசியப் படையெடுப்புதான் சோழர்களின் மிகப்பெரிய கடற்படையெடுப்பு. இதில்தான் யானைகள் நீண்ட தொலைவு கொண்டு செல்லப்பட்டன. இந்தப் படையெடுப்பு நாட்களில் நடந்து முடிந்துவிட்டது என்கிறார்கள். மிகப்பெரிய சாதனை.
இராசேந்திரனின் படையெடுப்பில் மயக்கமருந்து வழியில் நிறுத்தி யானைகளை நிலத்தில் நடக்கவிட்டு சுதாரிக்கச் செய்தது எல்லாம் நடந்தது. சரி. யானைகளைக் கொண்டு சென்றார்களா? இந்தக் கேள்விக்கு விடை சொல்ல சோழர்களின் கலங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
தரணி என்ற கலம் நீண்ட நாட்கள் கடலில் இருந்து தாக்குப்பிடிக்கக் கூடியது. தரணி கலம் தனித்து இயங்காது. ஒரு தொகுப்பாக இயங்கும். நீண்ட நாட்கள் கடலில் தாக்குப்பிடிக்கத் தேவையான வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இதில் யானைகளை கொண்டு செல்ல முடியாது.
லோலா மற்றும் வஜரா ஆகிய கலங்கள் விரைவுத் தாக்குதலுக்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டவை. விரைவாகப் பயணிக்க ஏற்ற வகையிலான எடையும் அமைப்புமாக இருக்கும். வஜரா சிதைந்த கலங்களுக்கு உதவுவதற்காகவும் பயன்பட்டது. இதிலும் யானைகளை ஏற்ற வாய்ப்பில்லை.
திரிசடை – இதுதான் சோழர்களின் கலங்களிலேயே மிகப் பெரியதும் எடை தாங்கக்கூடியதுமாகும். பெயருக்கு ஏற்றவாறு மூன்று மூன்று கலங்களாக இணைந்து பயணிக்கும். போரிடும். ஒவ்வொரு திரிசடை கலனிலும் உச்சமாக நானூறு படைவீரர்கள் செல்ல முடியும். படை வீரர்கள் செல்வதற்கு திரிசடை தேவை.
யானைகளை கொண்டு செல்வதற்கு திரிசடைதான் பயன்படுத்தப்பட்டது. இரேசேந்திரனின் கிழக்காசியப் படையெடுப்பு மிகுந்த திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது. பத்துநாள் முன்பின் தொடங்கியிருந்தாலும் பெருவெற்றி கிட்டாமலோ வெற்றியே கிட்டாமலோ போயிருக்கலாம்.
கடற்காற்று நாட்கள் என்ற அளவில் திட்டம் தீட்டப்பட்ட போரில் விரைந்து செயலாற்றுவதே பெருந்தேவை. அதையும் மேற்சொன்ன கல அளவுகளை வைத்து ஒரு கலத்தில் எத்தனை யானைகள் கொண்டு செல்லப்பட்டிருக்கக்கூடும் என்ற கணக்கை அவரவர் மனக்கணக்காகப் போட்டுக் கொள்ளுங்கள்.
இராசேந்திரனின் கடாரப்போர் பற்றி தேடிப்படியுங்கள். கடற்போர் செல்லும் எண்ணமில்லாமல் இருந்த இராசேந்திரனை எது போரெடுக்கத் தூண்டியது என்றும் எப்படி போர் நடத்தப்பட்டது என்றும் அந்தப் போரின் விளைவுகள் என்னவென்றும் வியப்பான தகவல்கள் தெரிந்து கொள்ளலாம்.
மொழியையும் வரலாற்றையும் தரவுகளோடு நேர்மையாக அணுக வேண்டும். அப்போதுதான் நடந்த நிகழ்வுகளில் நாம் எதை சிறப்பாகப் பார்க்க வேண்டும் தவறாகப் பார்க்க வேண்டும் என்ற தெளிவு இருக்கும். நான் தெரிந்தவைகளை இந்தத் திரியில் கொடுத்துள்ளேன். தவறுகள் இருப்பின் சுட்டவும். தெரிந்து கொள்கிறேன்.
பி.கு
நண்பர் T.S.Krishnan கடாரப் போரில் யானைகள் கொண்டு செல்லப்படதற்கு எந்தத் தரவுகளும் இல்லை என்கிறார். கடாரப் போர் என்பது 15நாட்களில் விரைவாக நடத்தி முடிக்கப் பட்ட அதிரடித் தாக்குதல் என்பதில் நானும் அவரும் ஒத்த கருத்தில் இருக்கிறோம். அதற்காக பெரும்பாலும் லோலா மற்றும் வஜரா போன்ற விரைந்து செல்லும் கலங்களே பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதிலும் ஒத்த கருத்தில் இருக்கிறோம். திரிசடை பயன்படுத்தப்படதா என்பதற்கு தரவு இல்லை என்பதும் உண்மைதான். அதனால் யானைகளை கடாரப் போரில் பயன்படுத்தவில்லை என்கிறார். அவருடைய கருத்தையும் இந்தப் பதிவில் பதிவு செய்கிறேன். நூறு யானைகளாவது கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்று கருதினேன். ஆனால் அவர் சொன்னதை மறுதலித்து யானைகள் கடாரப் போரில் பயன்படுத்தப்படன என எதிர்வினையாற்ற என்னிடம் தரவுகள் இல்லை.
அன்புடன்,
ஜிரா
Good Info..