இசையரசியோடு இனிய மாலைப்பொழுதில்

மொதல்ல நண்பர்கள் கலைக்குமாருக்கும் கமலாவுக்கும் நான் நன்றி சொல்லனும். சுசீலாம்மாவைச் சந்திக்கிற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவங்க அவங்கதானே.

எத்தனையோ ஆண்டுகளா நெனச்சிட்டிருந்தது ஒரு நாள் நடக்குறப்போ பேரானந்தந்தான் போங்க.

எத்தன பாட்டுகள் அவங்க குரல்ல கேட்டிருப்போம். அந்தக் குரலை நேர்லயே கேக்க எவ்வளவு சந்தோஷம் தெரியுமா!

ரொம்ப அமைதியானவங்கன்னு நெனச்சேன். ஆனா நல்லா சிரிக்கச் சிரிக்கப் பேசிப் பழகுனாங்க. அவங்க குரல் மாதிரியே சுசீலாம்மா பழகுறவிதமும் இனிமை.

நான் பேரானந்தத்துல இருந்ததால என்ன நடந்ததுன்னு கோர்வையாச் சொல்லத் தெரியல. அதுனால சின்னச் சின்னக் குறிப்புகளாச் சொல்றேன்.

IMG_3844தென்னிந்திய மொழிகள் இல்லாம மத்த மொழிகள்ள பாடிய பாட்டுகள் பத்திப் பேச்சு வந்தது. அப்போ ஒரு பெண்டிரைவ் கொடுத்து அதுல இருக்கும் பாட்டுகள்ள ஒரியா பாட்டு போடச் சொன்னாங்க. ஆனா அதுல எது ஒரியாப் பாட்டுன்னு என்னால கண்டுபிடிக்க முடியல. ஒன்னொன்னா போட்டுப் பாக்கும் போது.. சிங்களப் பாட்டும் வந்துச்சு. சிங்களம்னு எனக்கு எப்படித் தெரியும்? பாடுனவங்கதான் சொன்னாங்க சிங்களத்துல எனக்குத் தெரிஞ்சது ரெண்டே சொற்கள்தான். ஒன்னு ஆய்புவன்(வணக்கம்). இன்னொன்னு சிங்களா(மொழியோட பேரு) 🙂

ஒரு வழியா அந்த ஒரியா பாட்டை யுடியூபுல கண்டுபிடிச்சாச்சு. கிருஷ்ண சுதாமாங்குற படத்துக்காக பாடிய பாட்டு அது. நீங்களும் கேட்டு ரசிக்கலாம்.

தெனாலிராமன் படத்துல விசுவநாதன் – இராமமூர்த்தி இசையில் ஒரு பாட்டு பாடியிருக்காங்க. சந்தனச் சர்சித நீலக்களேபர பீதவதன வனமாலி-ங்குற ஜெயதேவர் அஷ்டபதி அது. ஒடிஷா நாட்டுக்காரர் ஆன ஜெயதேவர் வடமொழியில் எழுதிய பாடல்களுக்கு அஷ்டபதின்னு பேரு. அருமையா இருக்கும். இங்க கேட்டுப் பாருங்க.

இதே மாதிரி அபூர்வமான சிலப்பதிகார கானல்வரிப்பாட்டை நினைவு படுத்தினேன். அவங்களுக்காக யுடியூபில் அந்தப் பாடலை ஓடவிட்டேன். சலீல் சௌத்ரி இசையில் பாடிய பாட்டு அது.

அப்போ அவங்க சொன்ன ஒரு விஷயத்த ஒங்களுக்குச் சொல்றேன். பொதுவா மொழி தெரியாம பாடுறப்போ முழுமையான பாவத்தைக் கொண்டு வர்ரது லேசு கெடையாது. ஏன்னா ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கும். மொழி தெரியாத அந்த நேரத்துல இசையமைப்பாளர் என்ன சொல்றாரோ அதுபடிப் பாடீட்டாலே போதும்.

சிலப்பதிகாரப் பாடல் பதிவு நடக்குறப்போ கானல்வரிப் பாட்டோட பொருளை அவங்களுக்கு விளக்கிச் சொல்லலையாம். சிலப்பதிகாரம் மாதிரி காப்பியங்களைப் பாடுறப்போ அதோட பொருள் தெரிஞ்சு பாடுனா இன்னும் நல்லாயிருக்கும்னு சுசீலாம்மா சொன்னாங்க. அதுனால சலீல் சௌத்ரி என்ன சொன்னாரோ அதை அப்படியே பாடினாங்களாம்.

சிலப்பதிகாரத்தை அடிப்படையா வெச்சு வெளிவந்த பூம்புகார் படத்துல அவங்க பாடிய இனிமையான பாடல்களை அப்ப நினைச்சுக்கிட்டோம்.

மெல்லிசை மன்னர் மேல ரொம்ப மரியாதையா இருக்காங்க சுசீலாம்மா. அவங்க பேசும் போதே அதப் புரிஞ்சிக்கலாம். மற்ற இசையமைப்பாளர்கள் மாதிரி இல்லாம சொல்லிக் கொடுத்ததை அப்படியே பாடனும்னு எதிர்பார்ப்பாராம் எம்.எஸ்.வி. சங்கதிகள்ள கூட சின்னச் சின்ன தவறுகள் இருக்கக்கூடாதுன்னு ரொம்ப கண்டிப்பா இருப்பாராம்.

அவரைப் பத்திப் பேசிக்கிட்டிருக்கும் போதே ஆகாயப் பந்தலிலே பாட்டைப் பாடுனாங்க. நேர்லயே கேட்டு ரசிச்சோம். அடுத்து வசந்தத்தில் ஓர் நாள் பாட்டைப் பாடுனாங்க. அதுல ரெண்டு மூனு இடத்துல தேவின்னு வரும். ஒவ்வொரு தேவிக்கும் சங்கதிகள் ஒவ்வொருவிதமா வரனும்னு எம்.எஸ்.வி சொல்லிக் கொடுத்து.. அதை அப்படியே பாடியதை ரசிச்சுச் சொன்னாங்க. எம்.எஸ்.வி க்விஸ்ல இந்தப் பாட்டைக் கொடுத்தப்ப அந்த ”தேவி”யில் வரும் சங்கதிகளை விளக்கிதான் புதிர் கொடுத்திருந்தேன். நாம ரசிச்சதையே அவங்களும் ரசிச்சிருக்காங்கன்னு தெரிஞ்சு ரொம்பப் பெருமையா இருந்துச்சு.

வசந்தத்தில் ஓர் நாள் பாடு மாதிரியே தெலுங்குல ஒரு கல்யாணப் பாட்டை பி.சுசீலா பாடியிருக்காங்க. இராஜேஸ்வரி காபி கிளப் படத்துல வரும் ஆகாஷப் பந்திரிலோ பாட்டு அது. டக்குன்னு அதை ஆகாயப் பந்தலிலே மெட்டில் பாடிக் காட்டினாங்க. பிறகு பெண்டியாலாவின் சகானா இராக மெட்டில் பாட்டில் பாடிக் காட்டினாங்க. இதுக்கு மேல நான் என்ன எதிர்பாக்க முடியும்!!!

ஆகாயப் பந்தலிலே மெட்டிலேயே தெலுங்கில் ஒரு பாட்டு வந்ததாச் சொல்லி அதையும் பாடிக் காட்டினாங்க. ஆனா என்னால அதை மூளையில் குறிச்சிக்க முடியல.

குக்க காட்டுக்கு செப்ப தெப்பா-ன்னு ஒரு தெலுங்குப் படம். நாய் கடிச்சா செருப்பால் அடி-ன்னு பொருள். எர்ராங்கி ஷர்மா இயக்கிய படம். இதுல எம்.எஸ்.வி இசைல ஏவண்டி ஏமனுகோகண்டி பாட்டைப் பாடியிருக்காங்க. அந்தப் படம் தமிழுக்கு இராணித்தேனியா வந்தப்போ இளையராஜா இசைல அதே பாட்டை என்ன சொல்லி நான் எழுதன்னு பாடியதை நினைவு படுத்தினேன்.

ஒடனே சந்தோஷமா என்ன சொல்லி நான் எழுத பாட்டைப் பாடினாங்க சுசீலாம்மா. அமுதம். அமுதம்.

சுசீலாம்மாவோட ஹம்மிங் பத்திப் பேச்சு வந்தது அடுத்து. நண்பர் வேலன் யுடீயில் நல்ல காரியம் சீக்கிரம் நடக்கனும் பாட்டை ஒலிக்க விட்டாரு. “போதும். பைத்தியம் பிடிச்சிரும்”னு சொன்னாங்க சுசீலாம்ம. ஏம்மான்னு கேட்டா.. இந்தப் பாட்டெல்லாம் கேட்டா அவ்வளவுதான்.. அதுக்குள்ளயே போயிருவோம். திரும்ப வெளிய வரவே முடியாது. அப்படியான பாட்டுன்னு சொன்னாங்க. அவங்க சொன்னது உண்மைதான்னு நமக்கே தெரியுமே!

அடுத்து காதல் இராஜ்ஜியம் எனது பாட்டைப் பாடினாங்க. இதெல்லாம் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்ச பாட்டு. அதை அவங்க நேர்ல பாடுறப்போ எப்படி ரசிச்சிருப்பேன்னு நினைக்கிறீங்க!!!

பொதுவா பாட்டுத் தொடக்கத்தில் ஹம்மிங் வரும். இராஜவீதி பவனி வந்தது பாட்டின் முடிவில் அவங்க ஹம்மிங் வரும். அதைக் கேக்க ஆசைப்பட்டதால யுடியூபில் போட்டுக் காட்டினேன். நீங்களும் கேளுங்க.
இந்தப் பாட்டு மூன்று விதமான இசையில் வரும். முதலில் மெல்லிசை. அடுத்து முகலாய இசை. அடுத்து மேற்கத்திய இசை. இதெல்லாம் அப்பவே எம்.எஸ்.வி செஞ்சாச்சு.

செம்மொழியாக தமிழ் மொழியாம் பாட்டில் வரும் ஹம்மிங் பத்தி நினைவுபடுத்தினேன். சுசீலாம்மாவையே சுதந்திரமா அந்த ஹம்மிங்கைப் பாடச் சொன்னாராம் ஏ.ஆர்.ரகுமான்.

அடுத்து கே.வி.மகாதேவன் இசையில் ஒரு அட்டகாசமான பாட்டு. மன்னவன் வந்தானடி…. இந்தப் பாட்டு பதியும் போது ரெண்டு பகுதிகளாப் பதிஞ்சாங்களாம். சிவாஜி நடந்து வரும் தொகையறா தனியாவும் பத்மினி ஆடும் பகுதி தனியாகவும் பதிவு செஞ்சாங்களாம்.

பாடல் பதிவு நடக்குறப்போ நடிகர் திலகமே ரெக்கார்டிங் தேட்டருக்கு வந்து உக்காந்துட்டாராம். அவரைப் பாத்ததும் இவங்களுக்கு ஒரு படபடப்பு. அதை அவர் புரிஞ்சிக்கிட்டு, “அம்மா.. இந்தப் பாட்டு ஒங்கள நம்பித்தான் எடுக்குறோம்”னு சொல்லிட்டுக் கிளம்பிட்டாராம். அதுக்கப்புறம் நடந்ததெல்லாம் வரலாறு. அந்தப் பாட்டும் படமும் எவ்வளவு பிரபலமாச்சுன்னு நான் சொல்ல வேண்டியதில்ல.

கூட வந்திருந்த நண்பர் வேலன், சுசீலாம்மா பாடிய முருகன் பாடல்களா நினைவு படுத்திக்கிட்டிருந்தாரு. அப்போ புகழேந்தி இசையில் சுசீலாம்மா பாடிய முருகன் பாமாலை எனக்கு ரொம்பப் பிடிக்கும்னு சொன்னேன். அவங்களுக்கு அந்த ஆல்பம் நல்லா நினைவிருக்கு. முருகன் பாமாலைன்னு சொன்னதும் கண்டுபிடிச்சிட்டாங்க. குன்னக்குடி இசையில் அவங்க பாடிய முருகன் பாடல்களும் நல்லாருக்கும். முருகன் பாமாலையும் இன்னும் சில முருகன் பாட்டுகளையும் இங்க கேக்கலாம்.

இப்படியே சில பாடல்களைக் கேட்டும்.. அவங்க பாடியும் பொழுது அட்டகாசமா போயிட்டிருந்தது. அப்போ சில பாடல்கள்ள வர்ர இசைக்கருவிகளைக் குறிப்பிட்டுப் பேசினாங்க. எம்.எஸ்.வி எப்படி எந்தப் பாட்டுக்கு எந்த எடத்துல எந்த இசைக்கருவின்னு முடிவு செஞ்சதைப் பாராட்டிப் பேசினாங்க. பாடகர்கள் மாதிரியே இசைக்கலைஞர்களும் எம்.எஸ்.வி சொல்லிக் கொடுத்ததை அப்படியே வாசிக்கனும்னு எதிர்பார்ப்பாராம். அப்படி வாசிக்கிற வரைக்கும் விடமாட்டாராம். ஆனா எம்.எஸ்.வி அப்படி கட்டுப்பாடா இருந்ததுதான் அந்தப் பாடல்கள் சிறப்பா அமையக் காரணம்.

நடுவுல கமகமன்னு காபியெல்லாம் வந்தது. எனக்குத்தான் காபி டீ பழக்கமெல்லாம் இல்லையே. ஒரு டம்ளர் தண்ணி மட்டும் குடிச்சுக்கிட்டேன்.

ஓட்டைப் பானைல நண்ட விட்டேன் லொட லொட லொடன்னு ஒரு பாட்டு பி.சுசீலா குரல்ல எம்.எஸ்.வி இசைல பதிவாச்சு. ஆனா அந்தப் படம் வெளிவரலை. அந்தப் பாட்டை நினைவுபடுத்தினேன். அவங்க கிட்ட அந்தப் பாட்டு இல்லாததால அதை மெயில்ல அனுப்பி வைக்கச் சொன்னாங்க. அடுத்த நாளே அனுப்பிட்டேன். முன்னொரு காலத்திலே படத்துக்காக பதிவான அந்தப் பாட்டை நீங்களும் ரசிக்கலாம்.

கூட வந்த முத்தலிப், “தர்பாரி கானடால நீங்க பாடியதுலேயே பிடிச்ச பாட்டு எது”ன்னு கேட்டான். அதுக்குதான் பதில் தெரியலன்னு சொன்னாங்க. ஒவ்வொரு பாட்டையும் விளையாட்டுத்தனமாப் பாடியதாச் சொன்னாங்க. பாட்டுக்குள்ள எறங்கி ஆராய்ச்சிப் பண்றதெல்லாம் ஆராய்ச்சியாளர்கள் வேலை. நாங்கள்ளாம் விளையாட்டுப் போக்குலதான் எல்லாம் செஞ்சோம். அவ்வளவுதான்னு முடிச்சாங்க.

அவங்க சொல்றது உண்மைதான். கலைஞர்கள் அறிவை வைத்துப் படைக்கிறதில்லை. அது ஏதோ அலகிலா விளையாட்டு. அது என்னவோ தனக்குப் புரிஞ்சிட்ட மாதிரி அறிவாளிகள் நெனச்சிக்கலாம். ஆனா கலை அறிவு தொடர்பானது அல்ல. உணர்வு தொடர்பானதுங்குற மெய்ஞானம் என்னைக்காவது அவங்களுக்குப் புரிஞ்சாலும் புரியலாம்.

திருப்பதி பிரம்மோற்சவத்துக்கு சுசீலாம்மாவைப் பாடக் கூப்பிட்டிருக்காங்களாம். அன்னமய்யா கீர்த்தனைகள் பாடப் போறதாச் சொன்னாங்க.

பேசுறதுக்கு இன்னும் எக்கச்சக்கமா இருக்கு. ஆனாலும் ரொம்ப நேரமாயிட்டதால வணக்கம் சொல்லிட்டுப் புறப்பட்டோம். வாசல் வரைக்கும் வந்து வழியனுப்பினாங்க. மறுபடியும் சந்திக்கலாம்னு அவங்க சொன்னப்போ அவ்வளவு மகிழ்ச்சி.

முருகன் நினைச்சா அதுவும் நடக்கும். முருகனருள் சுசீலாம்மாவுக்கு எப்பவும் இருக்கட்டும்.

அன்புடன்,
ஜிரா

About G.Ra ஜிரா

தன்னைத் தான் சுழலும் பூமியிலே என்னை நானறியா வாழ்வினிலே நேற்றை நினைவாக்கி இன்றை நடப்பாக்கி நாளை நோக்கி நிற்பவன். ஓடும் வரை ஓடும் கால்கள் வேண்டி நிற்பவன்.
This entry was posted in அனுபவங்கள், இசையரசி and tagged , . Bookmark the permalink.

23 Responses to இசையரசியோடு இனிய மாலைப்பொழுதில்

  1. kalai says:

    அப்படியே உணர்வு பூர்வமா எழுதி இருக்கீங்க.. ! எல்லாமே உணமி தான்னு அவங்க கூட பேசி பழகினவங்களுக்கு புரியும். போதிய அளவு புகழப்படாத ஓர் மகா சாதனையாளர் அவர்.

    • GiRa ஜிரா says:

      உண்மை கலை. கொண்டாடப்பட வேண்டிய மாபெரும் கலைஞர்.

  2. amas32 says:

    அருமையான பதிவு ஜிரா! போட்டிருக்கும் லிங்க்கில் வரும் பாடல்கள் தெவிட்டாத தேனமுதாக உள்ளன. உங்களுக்கு மறக்க முடியாத ஒரு சந்திப்பு 🙂

    amas32

    • GiRa ஜிரா says:

      நன்றி மா. உண்மைதான். மறக்க முடியாத சந்திப்பா அமைஞ்சிருச்சு. 🙂

  3. kalai says:

    எல்லாமே உண்மை தான் என்பது டைப் செய்யும் போது உணமி என தவறாக விழுந்து விட்டடது .

    • RAM says:

      Lovely compilation of the moments you spent with the legend herself … Loved reading it… took some time off from work and read it … now feeling ight… will listen to the songs at home… what a blissful weekend its gonna be.. ! 🙂

  4. GG says:

    Very nice. I could really feel your happiness….

  5. raaga_suresh says:

    Very happy to see that you were able to meet your idol and spend time with her and also listen to her sing. You are a lucky person :))

    One small point. “தெனாலிராமன் படத்துல விசுவநாதன் – இராமமூர்த்தி இசையில் ஒரு ஒரியா பாட்டு பாடியிருக்காங்க. சந்தனச் சர்சித நீலக்களேபர பீதவதன வனமாலி-ங்குற ஜெயதேவர் அஷ்டபதி அது.” Actually this Astapadhi is in Sanskrit. It is not in Oriya. Jayadeva was from Orissa (Malayalis contest this but that is a different story). His songs are used in Odissi dance but the compositions are in Sanskrit. Maybe you want to change that part.

    Loved the post.

    • GiRa ஜிரா says:

      Thanks Suresh. Very happy to see your comment. Yes. It is in Sanskrit. Thanks for pointing out. I have corrected it. 🙂

  6. கொடுத்துவச்ச மகராசன் நீர்!! பொதுவா இசைக்கருவிகளோடு பாடுவதைவிட இயல்பான சூழலில் உக்கார்ந்து பாடல்களை மெதுவா ஹம்மிங் செய்வதுபோல் பாடுவதைக் கேட்பது எனக்கு ரொம்பவே பிடிக்கும். அவுங்க தனித்துவமான குரலை அனுபவிக்கவும் முடியும்!

    ஆயிரக்கணக்குலே பாட்டுகளை பாடி அசத்துனவங்களில் முதல் இடம் சுசீலாம்மாவுக்குத்தான்! நல்லா இருக்கணும்!

    அவுங்க குரலைக் கேட்காமல் இளமையில் என் ஒரு நாள் கூட போனதில்லையே!!!!! ரேடியோவில் பாட்டின் ஆரம்ப ம்யூஸிக் வந்ததும் அது என்ன பாட்டுன்னு டக்னு தெரிஞ்ச காலம் அது!

    • GiRa ஜிரா says:

      வாங்க டீச்சர். உண்மையிலேயே அமைதியா அவங்க பாடிய ஹம்மிங்குகள் அட்டகாசம்.

      பாட்டோட ஆரம்ப இசையைக் கேட்டதும் பாட்டையும் பாடகர்களையும் கண்டுபிடிக்கிற காலமெல்லாம் மலையேறிப் போயிருச்சு டீச்சர். ம்ம்ம்.. அந்தக் காலம் திரும்ப வந்தா நல்லாயிருக்கும்.

  7. சில சந்திப்புத் தருணங்கள், நரம்பில் மீட்டிய வீணை ஒலி போல..

    அந்த ஒலி.. உள்ளுக்குள் ஓடிக்கிட்டே இருக்கும்;
    அகலா அலகிலா விளையாட்டு!
    இது உனக்கு அமைந்தது.. பெரும் பெரும் மகிழ்ச்சி!
    சுசீலாம்மா என்றோர் இசைத் தேவதை – பக்கத்துணை இருந்து காக்க காக்க!

    இந்தப் பக்கத்தை Refresh செய்து கொண்டே இருந்தேன், இரு நாட்களாய்..
    பதிவு இல்லை..
    இன்று Refresh செய்தேன்.. பதிவு இருந்தது
    உடனே எழுத முனைந்தேன்.. யாரும் எழுதவில்லை;
    ஆனால் தேடியது கிடைத்த பின், எழுத வரவில்லை;

    ஒவ்வொரு பத்தியும் பலமுறை பலமுறை வாசித்து விட்டேன்.
    அம்மாவுடன் பேசிய சுகம்!
    ஏதோ அந்த USB Disk-ஐ, அம்மா குடுக்கக் குடுக்க, நான் எடுத்துப் போடுவது போலோர் உணர்வு…

    வாயே பேசாத மெளனத்து இருந்து உன் – மலர் அடிக்கு,
    தீயே நிகர்த்து ஒளி வீசும் தமிழ்க் கவி செய்குவனே! – சுசீலாம்மா இருதாள் சரண்!

    • சுசீலாம்மா பாடிய முருகன் பாமாலையில்… ஒரு வரி வரும்!

      எனக்கும் உனக்கும் இருக்குதய்யா உறவு – அதில்
      எப்போதும் இல்லையொரு பிரிவு..

      இதைப் பாடத் துவங்கும் போது, அம்மா ஒரு முறை சிலிர்ப்பார் (குரலால்)
      என-க்க்க்-கும்
      உன-க்க்க்-கும்



      இருக்குதய்யா உறவு -ன்னு, அப்பறம் தான் வேகம் பிடிக்கும்!

      அந்த, “என-க்க்கும், உன-க்க்கும்” = ஓர் ஆனந்த உலகம்;
      ரெண்டே சொல்லால்… சுசீலாம்மா அமைத்த ஆனந்த உலகம்!

      காலை நியூயார்க் இரயில் பயணத்தில்.. திடீரென்று இந்தப் பாட்டு Shuffleஇல் வந்து விட்டால்..
      கண் பனிக்கும்
      சக பயணிகளுக்குத் தெரியாமல் இருக்க, Cooling Glass மறைக்க உதவும்!

      இது, சுசீலாம்மா பாடும் போது மட்டுமே, இப்படி ஆகிறது..
      அதே பாட்டை.. பல பாடகிகள் பாடியும் உள்ளனர் (மகாநதி ஷோபனா etc etc etc)
      அதே வரி தானே?
      ஆனால் அப்போதெல்லாம் ஒன்றும் ஆவதும் இல்லை; உணர்வதும் இல்லை..

      சுசீலாம்மா பாடும் போது மட்டும் ஏன்????

      ஏன்ன்ன்னா.. அது சுசீலாம்மா வாயால் பாடலை!
      ஆத்மாவால் பாடுவது!

      அதான் போலித்தனமோ/ நாடகத் தன்மையோ/ நட பைரவி ராகத் தன்மையோ இராது.. ஆத்மத்தன்மை மட்டுமே அமைந்த இசை-வரிகள்:

      என-க்க்க்-கும்
      உன-க்க்க்-கும்
      இருக்குதய்யா உறவு!

      • raj says:

        அருமை அருமை. எப்படி அனுபவித்து எழுதியிருக்கிறீர் ரவிசங்கர். மெய் சிலிர்க்கிறது.

  8. சுசீலாம்மா மட்டுமே இசை! பிறர் எல்லாரும் Zero என்று உலகில் யாருமே சொல்ல மாட்டாங்க! அது மடத்தனம்!
    ஆனா..
    சுசீலாம்மா பாடும் தாலாட்டு
    vs
    சுசீலாம்மாவை ஒத்த, அதே காலத்திய, பிற பெருங்கலைஞர்கள் பாடும் தாலாட்டு!
    மாறுபாடு தெரிகிறதே! ஏன்???

    அதே காரணம் தான்!
    இசைப் புலமை எனும் நாடகத்தன்மை (அ) ஞான பாவம் = தாலாட்டில் மட்டும் செல்லாது!
    தாலாட்டு = எளிமையான நேர்மை!
    வாயால் பாடாது, ஆத்மாவால் பாடுவது!

    அதான், சுசீலாம்மா தாலாட்டுக்கு மட்டும்.. அகம் குழையும், தூக்கம் வரும்!

    ஏதோ தேவஸ்தான அழைப்பிதழ், பிரம்மோற்சவம்-ன்னுல்லாம் சொல்லி இருக்கீங்க!
    சுசீலாம்மா அங்கு பாடப் போகும்.. அன்னமாச்சாரியரின் பாடல்.. தாலாட்டு..

    ஜோ அச்சுதானந்த, ஜோஜோ முகந்த
    ராவே பரமானந்த, ராம கோவிந்த
    மண்டலகு தொங்க, மா முத்து ரங்க
    ஜோ ஜோ..
    ஜோ ஜோ..

    ஏ வேங்கடவா, நீ செய்த புண்ணியம்= சுசீலாம்மா தாலாட்டு உன் சன்னிதியில்!

    காவிரியின் கரை அலைக்கும், கண்ணபுரத்தென் கருமணியே!
    என்னுடைய இன்னமுதே ராகவனே தாலேலோ…….

  9. அந்த ஜயதேவர் அஷ்டபதி (சம்ஸ்கிருதமாக இருந்தாலும்…)
    “சந்தன சர்ச்சித நீல களேபர”

    எத்தனையோ முறை கர்நாடக ஸங்கீதக் கலைஞர்கள் பாடிக் கேட்டது தான்!
    ஆனா, ஒரு முறை, வாழ்வில்.. பெருஞ் சோகத் துன்பம்..

    அப்போ ஆறுதலுக்குத், தோழனொருவன், இந்தப் பாட்டு கேளு-ன்னு அனுப்பி வச்சான்..
    சந்தன சர்ச்சித.. அதே கர்நாடகப் பாட்டு தானே? என்ன பெருசா இருந்துறப் போவது?-ன்னு கேட்கலை! சோகத்தில் வெறுமனே துவண்டு கிடந்தேன்…

    இரவு ஆனதும், படுக்கையின் பக்கத்தில், அவன் அனுப்பியதாச்சே-ன்னு, ஒரு மரியாதைக்கு ஒலிக்க விட்டேன்..

    சந்தன சர்ச்சித நீல களேபர
    பீதவஸன வனமாஆஆஆலி

    அய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ சுசீலா.. தாயே.. அம்மா

    காபி விலாச.. விலோல விலோசன
    கேலன ஜனித மனோஜம்
    த்யாயதி முக்த.. வதூர திகம் – மது
    சூதன வதன சரோஜம்

    கொடும் நரக இரவுகளையெல்லாம், அகம் குழைந்து, அமைதி செய்த தாயே.. சுசீலா…

    • இன்னும் என்னென்னமோ சொல்லத் தோனுது; ஆனா வாயடைக்குது…

      ஆகாயப் பந்தலிலே..
      சிலப்பதிகாரம்

      முடிஞ்சா, பிறகு வந்து சொல்லுறேன்..
      நனி மிகு நன்றி!

      புகைப்படம் அழகு..
      வயதின் அசதி தெரிஞ்சாலும், வாயோரச் சிரிப்பு மறையலை, சுசீலாம்மாவுக்கு!

      கண்டேன்.. கற்பினுக்கு அணியை, என்னுமாப் போலே,
      கண்டேன்.. சுசீலாம்மாவை, என்ற உன் நற்பேறு வாழ்க!

  10. மீள முடிந்தது..

    //கூட வந்த முத்தலிப், “தர்பாரி கானடால நீங்க பாடியதுலேயே பிடிச்ச பாட்டு எது”ன்னு கேட்டான். அதுக்குதான் பதில் தெரியலன்னு சொன்னாங்க//

    :))))
    பேராசிரியையே ‘பேஜார்’ செய்த முத்தலிப்:)
    தேவையா இது? அது ‘Darbari Canada’வாய் இருந்தா என்ன? ‘Darbari Mexico’வாய் இருந்தா ஒனக்கு என்ன?:)

    உம்ம்.. யோசிக்கிறேன்..
    ஆங்..
    முல்லை மலர் மேலே.. மொய்க்கும் வண்டு போலே..
    = தர்பாரி கானடா தான்:)
    ஆனா அது சுசீலாம்மா மட்டுமில்லை, TMS எனும் சகாப்தமும் சேர்ந்து பாடிய பாட்டு!

    சுசீலாம்மா மட்டும் பாடிய தர்பாரி கானடா உண்டா?
    ங்ஙே
    சின்னஞ் சிறிய வண்ணப் பறவை? – அது ஜானகில்ல?

    வசந்தத்தில் ஓர் நாள், மணவறை ஓரம்??? – சுசீலாம்மா தான்! Sounds like Darbari Kanada.. Not Sure!

    Whatever,
    தாலாட்டுக்கு.. தர்மாவதியும் இல்லை; பைரவியும் இல்லை, மாய மாள கெளளையில் மாளலும் இல்லை:)
    அஃதொரு.. பொட்டல்காட்டிலே.. ஏழைப் பெண்ணின், பிள்ளை ஏந்தும் பெண்ணின் “ஆத்மாநுபவம்”

    சுசீலாம்மா சரியாத் தான் சொல்லி இருக்காங்க; “விளையாட்டுப் போக்கு”ல தான் இவை அனைத்தும்!
    அலகிலா ‘உணர்ச்சி’ விளையாட்டு, இசையின் வழியாக!

  11. ஜீரா,

    கண்ணில் இருந்து தப்பிய பதிவு. ஜீரா, சுசீலாம்மாவை பார்த்தாரே பதிவை எழுத மறந்திட்டாரா என யோசித்தபடியே, உங்களிடம் கேட்பதற்கு முன்னால் ஒரு பார்த்துவிடலாம் என இங்கு வந்தேன். உங்க பேரானந்தத்தை இந்த அளவு நியாபகப்படுத்தியிருக்கீங்க சபாஷ். முருகன் மூண்டும் சந்திக்கும் வாய்ப்பினை வழங்கட்டும்.

  12. raj says:

    ஜி.ரா வழக்கம் போல் அருமை .. இசையரசியை சந்தித்தவர்கள் அனைவருக்கும் தெரியும் எவ்வளவு பாக்கியம் செய்தவர்கள் என்று.

I am eager to hear what you want to say. Please say it. here. :)