சென்ற பதிவை இந்தச் சுட்டியில் படிக்கலாம்.
முதலில் உடையாளூர் கைலாசநாதர் கோயில்தான் இராசராசனின் பள்ளிப்படை என்று சொல்கிறவர்கள் முன்னிறுத்தும் கருத்துகளைப் பார்ப்போம்.
1. இராசராசனின் சிவபாதசேகரன் பெயருக்கு ஏற்றவாறு, இந்தக் கோயிலில் துவாரபாலகர் காலடியிலும் ஒரு சிற்பம் உள்ளது. அதை இராசராசன் என்கிறார்கள்.
2. அந்தச் சிற்பம் இராசராசனுடையது என்பதை எப்படிச் சொல்கிறார்கள்? காலடியில் இருக்கும் சிறு சிலையானது அரசச்சின்னங்களோடு இல்லை. இராசராசன் காசிப் பயணத்துக்குப் பின் அகோரி ஆகிவிட்டார். தஞ்சைப் பெரிய கோயிலில் இராசராசன் தன் மனைவியரோடு நிற்கும் ஓவியத்தில் இராசராசனுடைய உடை அரச உடையாக இல்லாமல் அகோரியின் உடை பாவனையோடு இருக்கிறார். அவருடைய மனைவியர் ஆடம்பராமாக இருக்கிறார்கள். அந்த ஓவியத்தையும் சிற்பத்தையும் ஒப்பிட்டு இராசராசன் என்று கூறுகிறார்கள்.(சடைமுடியை இறுக்கி தலையில் கட்டியிருப்பது, மீசை, தாடி, எளிய உடைகள்) வாசலின் இடப்பக்கமும் துவாரபாலகரின் காலடியில் ஒரு சிறு சிலை உள்ளது. அது அந்தக் கோயிலைக் கட்டிய (அல்லது) எடுத்துக்கட்டிய முதலாம் குலோத்துங்கச் சோழன் என்கிறார்கள்.
3. பாற்குளத்தம்மன் கல்வெட்டில் சிவபாதசேகரன் திருமாளிகை என்று குறிப்பிடப்பட்டது சிவபாதசேகரன் துஞ்சும் திருமாளிகை என்றொரு கருத்தும் சொல்கிறார்கள்.
4. இராசராசன் அகோரியாக இருந்ததால் இறந்தபின் எரியூட்டப்படாமல் அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்டுள்ளார் என்றொரு கருத்தும் சொல்கிறார்கள்.
5. ஆகம சாத்திரத்தின்படி பள்ளிப்படைக் கோயிலின் விமானம் சதுரமாகவும் அதன் அடிப்பகுதி ஒன்பது தச்சு முழம் கொண்டதாகவும் இருக்க வேண்டும். கைலாசநாதர் கோயிலின் விமானம் இந்த இலக்கணப்படி இருக்கிறது. ஆகவே அது பள்ளிப்படைக் கோயில்தான்.
6. கோயிலின் தென்மேற்கில் வடக்கிலிருந்து இராசராசன் அழைத்து வந்த பாசுபத சைவப் பார்ப்பனர்களின் அக்கிரகாரம் இருப்பதும் பள்ளிப்படைக் கோயிலின் ஆகமவிதி என்கிறார்கள்.
அடுத்து கைலாசநாதர் கோயில் இராசராசனின் பள்ளிப்படை இல்லை என்பவர்கள் மேற்சொன்ன கருத்துகளை எப்படி மறுதலிக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
1. துவாரபாலகரின் காலடியில் இருக்கும் சின்னஞ்சிறு சிலைகள், அந்தச் சிலைகளைச் செதுக்கிய தச்சர்கள். போகர் மற்றும் துவாரபாலகர்கள் காலடியில் இருப்பவர்கள் தச்சர்கள். அவர்கள் இராசராசனோ குலோத்துங்கனோ அல்லர்.
2. பாற்குளத்தம்மன் கோயில் கல்வெட்டு சொல்லும் திருமாளிகை, இராசராசன் தங்கியிருந்த மாளிகை. அதன் முன்னால் இருந்த மண்டபம் சிதைந்ததால் மாற்றப்பட்டுள்ளது. அவ்வளவே அதன் பொருள். பள்ளிப்படையை திருமாளிகை என்று சொல்லும் வழக்கம் இல்லை.
3. கைலாசநாதர் கோயிலில் இதுவரை கிடைத்த கல்வெட்டுகளில் இராசராசன் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. அவை கோயிலுக்களித்த தானங்களைப் பற்றியும் நடந்த பணிகளைப் பற்றியும் அது தொடர்பானவர்களைப் பற்றியும் உள்ளது.
4. இராசராசன் அகோரியாக வாழ்ந்திருந்தாலும் எரியூட்டப்படாமல் புதைக்கப்பட்டார் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. (எரியூட்டப்பட்டிருக்கலாம் என்பதற்கும் எந்தச் சாற்றும் இல்லை).
இப்படியாக வரலாற்றாய்வாளர்கள் பலவிதமான கருத்துகளை முன் வைக்கிறார்கள். இதையெல்லாம் விட ஒரு கருத்து படித்தேன். பாண்டியர் மேல் பரிதாபம் தான் வந்தது. அதாவது சாய்ந்த நிலையிலிருக்கும் சிவலிங்கம் ராசராசனின் பள்ளிப்படைதான். ஏன் அது அப்படி இருக்கிறதென்றால், (மதுரை மீட்ட) சுந்தரபாண்டியன் 250 ஆண்டுகளுக்கும் மேலான அடக்குமுறையிலிருந்து பாண்டியர்களை எழுச்சி கொள்ளச் செய்து சோழர் மீது படையெடுத்த போது இராசராசனின் பள்ளிப்படையையும் இடித்துவிட்டான் என்பதுதான் அந்தக் கருத்து.
சோழ மன்னர்களால் பலவிதமான அடக்குமுறைகளுக்கும் அவமான இழிவுகளுக்கும் ஆளான பாண்டியர்கள் மீண்டெழுந்து சுந்தரபாண்டியன் தலைமையில் தாக்கும் போது பெருவெறி கொண்டு தாக்கியது உண்மைதான். சோழர்களின் அரச கட்டிடங்களை இடித்ததும் உண்மைதான். பாண்டிய நாடு இனி சோழநாட்டின் ஒரு பகுதி. இனி அங்கு மணிமுடி சூட்டி பதவியேற்கும் அரசவை தேவையில்லை என்று சொல்லி மதுரையிலிருந்த பழம்பெரும் அரசவையை சோழன் இடித்ததையும் அவர்கள் மறக்கவில்லை. அந்த வெறியோடு சோழர்கள் பலகாலம் முடிசூட்டிக் கொண்ட கங்கை கொண்ட சோழபுரத்து ஆயிரங்கால் மண்டபத்தில் சுந்தரபாண்டியன் தன்னை சோழ மன்னனாகவும் முடிசூட்டிக் கொண்டதும் உண்மைதான். அப்படி முடிசூட்டிக்கொண்ட பிறகு அந்த அரசவை மண்டபத்தை இடித்து அங்கு கழுதையை வைத்து உழுது எள் விதைத்ததும் உண்மைதான். ஆனால் அதே சுந்தரபாண்டியன் தான் பட்டினப்பாலை இயற்றிய கடியலூர் உருத்திரங்கண்ணனாருக்கு கரிகாற்சோழன் பரிசளித்து மதிப்பு செய்த மண்டபத்தை இடிக்கக் கூடாது என்றும் சொன்னவன்.
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனுக்கு இருந்த சினமெல்லாம் சோழர்கள் பாண்டியர்களுக்குச் செய்த அடக்குமுறையாலும் அவமானத்தாலும் உண்டான சினம். அதை அவன் அரசியலாக எங்கு காட்ட வேண்டுமோ அங்கு மட்டுமே காட்டினான். இத்தனைக்கும் சுந்தரபாண்டியன் இடித்துவிட்டான் என்று இவர்கள் சொல்லும் பள்ளிப்படைக்கு அருகிலுள்ள பட்டீசுவரத்தில்தான் இராசேந்திரன் தன் சிற்றன்னை பஞ்சவன் மாதேவிக்கு கட்டிய பள்ளிப்படை கோயில் நெட்டுக்குத்தலாக இன்றும் நின்றுகொண்டிருக்கிறது. (பழுவேட்டரையர் வீட்டுப் பெண்ணான பஞ்சவன்மாதேவி இராசராசனின் மனைவியரில் ஒருவர்)
சரி. இராசராசன் பள்ளிப்படை குறித்து இப்போதிருக்கும் சான்றுகளை வைத்துப் பார்த்தால், குறிப்பிட்ட இடம்தான் இராசராசனின் பள்ளிப்படை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இன்னும் யோசித்தால் பஞ்சவன் மாதேவிக்கு பள்ளிப்படை கட்டிய இராசேந்திரன் தன்னுடைய தந்தைக்கு பள்ளிப்படை கட்டினானா என்பதே ஐயமாக இருக்கிறது. இந்த ஐயத்துக்கு இராசேந்திரன் ஐம்பது வயது வரையிலும் இளவரசனாகவே இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். அதுமட்டுமில்லாமல் தஞ்சையை விட்டுவிட்டு கங்கை கொண்ட சோழபுரத்துக்கு தலைநகரை மாற்றிக் கொண்டும் போய்விட்டான். (சோழர்கள் ஆட்சியில் நீண்ட நாட்கள் தலையூராக இருந்த பெருமை கங்கை கொண்ட சோழபுரத்துக்கு உண்டு. இராசேந்திரன் இறந்ததும் தஞ்சை மாவட்டதில் அல்ல. கங்கை கொண்ட சோழபுரம் இருக்கும் அரியலூர் மாவட்டமும் அல்ல. திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு அருகிலுள்ள பிரம்மதேசம் என்ற ஊர். இங்குதான் இராசேந்திரனோடு அவன் மனைவியும் உடன்கட்டை ஏறியிருக்கிறார்.)
இப்போது நீதிமன்றத்தின் தலையீட்டினால் ஆய்வு செய்கிறவர்கள் என்ன கிடைத்தால் இராசராசனின் பள்ளிப்படையை உறுதி செய்ய முடியும்?
வேறென்ன? கல்வெட்டு அல்லது செப்பேடு கிடைத்தால்தான் உறுதி செய்ய முடியும். வெறும் இடிக்கப்பட்ட மண்டபங்களின் தூண்களோ பாகங்களோ கிடைத்தால் அதை மட்டும் வைத்து பள்ளிப்படை என்ற முடிவுக்கு வர முடியாது. பள்ளிப்படையாக இருக்கலாம் என்று ஊகம் மட்டுமே மிஞ்சும். அதைத்தான் ஏற்கனவே செய்து கொண்டிருக்கிறோமே. இராசராசன் சமாதி என்று வாட்சப்களில் வலம் வரும் சிவலிங்கம் ஆற்றோட்டத்தில் அடித்துவரப்பட்ட சிவலிங்கமாகவும் இருக்கக்கூடும் என்றும் ஒரு கருத்துண்டு.
ஒருவேளை இன்றிருக்கும் தொழில்நுட்பத்தால் பூமிக்கடியில் தோண்டாமலே உள்ளே எலும்புக்கூடு எதையும் கண்டுபிடித்தால்? கண்டுபிடிக்கலாம். ஆனால் அது யாருடையது என்று எப்படி முடிவுக்கு வருவது? சிக்கல்தான். வெளிநாட்டில் ஏசுநாதரின் கல்லறையை தேடிக் கொண்டிருக்கிரார்களாம். ஒருவேளை ஏசுநாதருடைய கல்லறையையே கண்டுபிடித்தாலும் கூட அது அந்தக் காலத்தில் அதே பெயரில் வாழ்ந்த அறுநூறு பேர்களின் ஒருவரின் கல்லறை என்ற அளவிலேயே முடிவுக்கு வரமுடியுமாம்.
நேர்மையான வரலாற்றாய்வாளர்கள் ஊகங்களை மட்டும் எடுத்துக் கொள்வதில்லை. போதுமான சான்றுகள் இருந்தால் மட்டுமே, அதலிலுள்ள இடைவெளிகளில் ஊகங்களை இட்டு நிரப்புவார்கள். அப்படி எதுவும் கிடைக்கும் வரை இராசராசனின் பள்ளிப்படை குறித்து எந்தத் தெளிவான முடிவுக்கும் வரமுடியாது.
இராசராசனின் பள்ளிப்படையோ இராசேந்திரனின் பள்ளிப்படையோ தெரிய வந்தால் மகிழ்ச்சிதான். அது வரலாற்றின் தெரியாத பல உண்மைகளையும் வெளிக்கொண்டு வரலாம். அப்படியான சான்றுகள் இப்போது நடக்கும் ஆய்வில் கிடைக்கும் என்று நம்புவோம். ஊகங்களின் அடிப்படையில்தான் எந்த ஆய்வும் நடக்கும். ஆனால் ஒரு குறிப்பிட்ட இடத்தை இராசராசனின் பள்ளிப்படை என்றே முடிவு செய்துவிட்டு, அந்த முடிவுகளை நிரூபிப்பதற்கே ஆதாரங்களைத் தேடுவது வரலாற்று நோக்கில் எவ்வளவு பயன் கொடுக்கும் என்று தெரியவில்லை. நாளை சான்றுகள் எதுவும் கிடைக்காவிட்டால் வெறும் ஏமாற்றமே மிஞ்சும். அதுவுமில்லாமல் உறுதி செய்யாத ஒரு இடத்தை இராசராசன் பள்ளிப்படை என்று கொண்டாடுவது இராசராசனுடைய பெருமைக்கு ஏற்புடையதாக இருக்குமா என்பதையும் உங்கள் கருத்துக்கே விட்டுவிடுகிறேன்.
காத்திருப்போம் சான்றுகளுக்காக.
அன்புடன்,
ஜிரா
பி.கு – நான் படித்த கேள்விப்பட்ட தகவல்களை இங்கு பகிர்ந்துள்ளேன். இதைவிட இன்னும் தகவல்கள் இருந்தால், அல்லது இதில் தவறுகள் இருந்தால் பின்னூட்டமிடுங்கள். அவற்றையும் பதிவில் சேர்த்துவிடுகிறேன். – நன்றி